வங்கதேசம்…. 44 மாசம்…! இதை விட வேறு கொண்டாட்டம் இலங்கைக்கு இனிமே கிடைக்குமா?
Recommended Video
கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், இலங்கை அணி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த மண்ணில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 2வது ஒரு நாள் போட்டி, கொழும்பில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேசம், 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில், இலங்கை பவுலிங்கில் மிரண்டு 6 விக்கெட்டுக்கு 117 ரன்களுடன் திணறியது வங்கதேசம்.

98 ரன்கள் குவிப்பு
விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக ஆடி, அணியின் மானம் காத்தார். அவர் எடுத்த 98 ரன்கள் பெரும் உதவியாக இருந்தது. ரஹிம் 8 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 3வது வங்கதேச வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இலங்கை வென்றது
ஹாசன் 43 ரன் சேர்த்தார். இலங்கை தரப்பில் பிரதீப், உடானா, தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தொடரை கைப்பற்றியது
தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 75 பந்துகளில் 82 ரன்களும், மேத்யூஸ் 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, இலங்கை அணி 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

44 மாத வெற்றி
இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட் அணிக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. சொந்த மண்ணில், இலங்கை 44 மாதங்களுக்கு( 3 ஆண்டுகள், 8 மாதங்கள்) பிறகு வென்ற முதல் தொடர் இதுவாகும். ஸ்டார் வீரர் அவிஷ்கா பெர்ணான்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Click it and Unblock the Notifications