கோல்கத்தா: இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.
இந்தியா-இலங்கை இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது.
இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
தரங்கா மற்றும் தில்ஷான் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். 9 ரன்கள் மட்டுமே எடுத்த தில்ஷான் 7வது ஓவரில் ஆஷிஷ் நெஹரா பந்தில் அவுட்டானார்.
இவருக்கு அடுத்தபடியாக வந்த ஜெயசூர்யா 3 பவுண்டரிகளை அடித்தார். எனினும் 15 பந்துகள் மட்டுமே சந்தித்து ஜாகீர்கானின் பந்தில் அவுட்டானார். 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார ஜெயசூர்யா.
அடுத்து வந்த சங்ககாரா, 72 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் டெண்டல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஓபனிங்கில் களமிறங்கிய தரங்கா 42வது ஓவர் வரை நின்று விளையாடி சதமடித்தார். 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளை விளாசிய தரங்கா 118 ரன்களுடன் ஜாகீர் கானிடம் போல்டானார். 128 பந்துகளை தரங்கா சந்தித்தார்.
பின்னர் வந்த திசாரா பெரேரா அதிரடியாக ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்தார். 14 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆஷிஷ் ரெஹராவின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
47வது ஓவரில் பரபரப்பாக ரன் சேர்த்துக்கொண்டிருந்த மஹிளா ஜெயவர்த்தனே ரன் அவுட் ஆனார். 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்து 33 ரன்கள் எடுத்தார் ஜெயவர்த்தனே.
49.2வது ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்த நிலையில், கடம்பியும், திலன் சமரவீராவும் ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது மைதானத்தில் மின் விளக்குகள் திடீரென பழுதாகி, வெளிச்சம் குறைந்தது. இதனால் போட்டி தடைபட்டது. வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. கடம்பி 15 பந்துகளில் 23 ரன்களும், சமரவீரா 7 பந்துகளில் 13 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.
ஜாகீர்கான் 10 ஓவர்களில் 2 விக்கெட் எடுத்து 49 ரன்கள் கொடுத்தார். ஹர்பஜன் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 53 ரன்கள் கொடுத்தார்.
ஆஷிஷ் நெஹரா 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுடன் 68 ரன்கள் கொடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 9 ஓவரில் 52 ரன்களும், இஷாந்த் 7 ஓவர்களில் 67 ரன்களும் கொடுத்தனர். இருவருக்கும் விக்கெட் இல்லை.
சுரேஷ் ரெய்னா 2 ஓவரில் 9 ரன்களும், சேவாக 3 ஓவரில் 15 ரன்களும் கொடுத்தனர்.
இந்திய அணி: விரேந்தர் சேவாக் (கேப்டன்), கவுதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், பிரவீன் குமார், ஆஷிஷ் நெஹரா, சுதீப் தியாகி மற்றும் பிரஞான் ஓஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியில் குமார் சங்ககாரா(கேப்டன்), உபுல் தரங்கா, திலகரத்னே தில்ஷான், மஹிளா ஜெயவர்த்தனே, கடம்பி, சமரவீரா, ஜெயசூர்யா, திசாரா பெரேரா, நுவுன் குலசேகரா, திலன் துஷாரா, லசித் மலிங்கா, புஷ்பகுமாரா, சூரஜ் ரன்திவ் மற்றும் அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.