கொழும்பு: ஒரு டி-20 போட்டியில், 18 சிக்சர்கள் அடித்து வெஸ்ட் இன்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் சாதனை புரிந்தது எல்லாம் அசாதாரணம். அதை தூக்கி சாப்பிடும் வகையில், இலங்கை அணியின் வீரர் ஒரு ஓவரில் 7 சிக்சர் அடித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மொகாலியில் நடந்த இரண்டாவது ஒரு தினப் போட்டியில், ரோஹித் சர்மா அடித்த, 12 சிக்சர்களை வேடிக்கை பார்த்தனர்.
அதே நேரத்தில் இலங்கையில், 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், நவிண்டு பகாசரா என்ற வீரர் ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சார்பில், 15 வயதுக்குட்பட்டோருக்கான முரளி குட்னல் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. இதில் தர்மபாலா கோட்டவா அணிக்கு எதிரான ஆட்டத்தில்
ஃபாக் கிரிக்கெட் அகாதெமி அணிக்காக விளையாடிய நவிண்டு 89 பந்துகளில் 109 ரன்கள் அடித்தார். அவர் ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்தார். நோ பாலிலும் அவர் சிக்சர் அடித்தார்.
ஒரு ஓவரில் 7 சிக்சர் அடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தப் போட்டியை நேரில் பார்த்த முரளிதரன் அசந்து போனார். நவிண்டுவை அவர் பாராட்டினார்.
சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு தினப் போட்டியில், 2007 உலகக் கோப்பையின் போது நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ஹர்ஷலே கிப்ஸ் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவின் யுராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக, ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்.
முதல்தர கிரிக்கெட்டில், தற்போதைய இந்திய அணியின் கோச் ரவிசாஸ்திரி, ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்துள்ளார்.