சிட்னி: பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தனுஷ்கா குணதிலகாவை விடுவித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனால் இலங்கை அணி வீரர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்ட போது, அந்த அணியின் நட்சத்திர வீரரான தனுஷ்கா குணதிலகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்கையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனுஷ்கா குணதிலகா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது தெரிய வந்தது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணுக்கும், இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கும் ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் இருவரும் பார் ஒன்றில் சந்தித்து கொண்டனர். இதன்பின் அந்த பெண்ணை தனுஷ்கா குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், இருவரின் சம்மதத்திற்கு பின்னரே உடலுறவு கொண்டதாகவும், பின்னர் பாதுகாப்பின்றி தவறாக நடந்ததாகவும், அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் காரணமாக இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகாவின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டது. கடந்த 11 மாதங்களாக அவர் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி இருந்தார்.
இந்த நிலையில் 11 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சம்மந்தப்பட்டவர்களின் உடலுறவு தொடர்ச்சியாக இருந்ததால், அவர் ஆணுறையை அகற்ற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ்கா குணதிலகா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த தனுஷ்கா குணதிலகா, கடந்த 11 மாதங்கள் என் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலமாக அமைந்தது. வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளதாக நினைக்கிறேன். மீண்டும் இலங்கை சென்று சர்வதேச கிரிக்கெட்டுக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவருக்கு ஆதரவாக இலங்கை அணியின் கேப்டன் ஷனகா உள்ளிட்ட இலங்கை வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.