கொழும்பு : ஆசிய கண்டத்தில் ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் ராஜாவாக திகழ்ந்த இலங்கை அணி தற்போது ஒரு கத்துக்குட்டி அணி போல் தடுமாறி வருகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தகுதி பெறவே இல்லை என்ற ஒரு மோசமான நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டு இருக்கிறது.
1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி அதன் பிறகு 2007,2011 என இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை பைனலுக்கும், 2014 டி20 உலக கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் எப்போது ஜெயவர்த்தனே, சங்கக்காரதில்சான் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றார்களோ அதிலிருந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது.

இடையில் ஒரு ஆசிய கோப்பை மட்டும் இலங்கை வென்றாலும் தற்போது உள்ள பெரிய தொடர்களின் முதல் சுற்றிலே தோல்வியை தழுவி வெளியேறி வருகிறது. இதனால் இலங்கை அணியும் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இலங்கை தோல்வியை தழுவிய பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்தார். இந்த சூழலில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இலங்கை சரியாக விளையாடாததால் அந்த அணி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இதனால் இருக்கும் கொஞ்ச மரியாதையையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்த வேண்டும்.
இந்த சூழலில் இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் விளையாடி 6973 ரன்கள், 445 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13,430 ரன்கள் ஜெயசூர்யா அடித்திருக்கிறார். எப்போதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆக்ரோஷமாக செயல்படும் சனத் ஜெயசூர்யா இலங்கை அணியின் சரிவை சரி கட்டுவார் என்று நம்பப்படுகிறது. இந்தியா இலங்கை தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.