கொழும்பு: லங்கா பிரீமியர் லீக்கின் அறிமுக தொடரின் போது மேட்ச் ஃபிக்ஸிங் செய்வதற்காக 2 வீரர்களை தொடர்பு கொண்ட புகாரில், இலங்கை முன்னாள் வீரர் சசித்ரா சேனநாயகே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. 4வது ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20 முதல் நடைபெற்றது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் எல்பிஎல் தொடர் புத்துயிர் பெற்றுள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு எல்பிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் லங்கா பிரீமியர் லீக் நடைபெற்று வரும் நிலையில், எவ்வளவு பிரபலமடைந்ததோ, அதே அளவிற்கு சர்ச்சைகளும் குவிந்துள்ளன. தற்போது லங்கா பிரீமியர் லீக் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயற்சித்ததாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சேனநாயகே விளையாட்டு ஊழல் விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணிக்காக 49 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 78 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சேனநாயகே. 2012 முதல் 2016 வரை இலங்கை அணியின் முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர். இவர் இலங்கா பிரீமியர் லீக் அறிமுக தொடரின் போது துபாயில் இருந்து தொலைபேசி மூலமாக இரு வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங் செய்வதற்காக தொடர்பு கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு சேனநாயகா வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சேனநாயகா மீதான புகார் குறித்த விசாரணை தீவிரமடைந்து தெரிய வந்தது. இந்த நிலையில் இன்று காலை இலங்கை அணி முன்னாள் வீரர் சசித்ரா சேனநாயகே விளையாட்டு ஊழல் விசாரணை குழு முன் விசாரணைக்காக ஆஜரானார்.
அதன் பின் திடீரென சசித்ரா சேனநாயகே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சசித்ரா சேனநாயகா, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் கூட இல்லை என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.