டெல்லி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ் 25 பந்துகளில் அரைசதம் விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் 4வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா அணி படைத்தது.

அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் வான் டர் ரஸன் 108, மார்க்ரம் 106 ரன்களும், டி காக் 100 ரன்களும் விளாசினர். அதிலும் எய்டன் மார்க்ரம் உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்தார். இதையடுத்து இலங்கை அணியின் நிலை பரிதாபமாகியது. 429 ரன்கள் என்ற இலக்கை விரட்ட இலங்கை அணி தரப்பில் நிஷாங்கா - குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.
அதில் 2வது ஓவரிலேயே மார்கோ யான்சன் பந்தில் நிஷாங்கா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதன்பின் நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் களமிறங்க, ஆட்டம் களைகட்டியது. இங்கிடி வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய மெண்டிஸ், 5வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசி ஆச்சரியம் கொடுத்தார். தொடர்ந்து மார்கோ யான்சன் பந்துவீச்சிலும் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி மிரட்டினார்.
இதன் மூலம் 25 பந்துகளில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் அரைசதம் கடந்தார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 54 எடுத்திருந்தது. அதில் குசல் மெண்டிஸின் ரன்கள் 51 ரன்களாக இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் குசல் மெண்டிஸின் ஆட்டம் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் ஆட்டத்தை நினைப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிறப்பாக ஆடிய மெண்டிஸ் 42 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 76 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.