கொழும்பு: 26 வயதாகும் இலங்கை நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹசரங்கா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இதற்கு ஹசரங்கா கூறியுள்ள காரணம் தான் கூடுதல் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
அண்மை காலங்களாக சர்வதேச அளவில் பிரான்சைஸ் கிரிக்கெட்டின் வளர்ச்சி கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளர்ந்துள்ளது. டி20, தி ஹன்ரெட், டி20 என்று பல்வேறு லீக்குகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் பிரபலமில்லாத நாடுகளில் கூட டி10 லீக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கூட ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்ட டி10 லீக் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய அணிக்காக ஆடிய யூசுப் பதான், உத்தப்பா, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்றனர்.

இதனால் வருங்காலத்தில் கால்பந்தை போல் கிரிக்கெட்டும் பிரான்சைஸ் கிரிக்கெட் பக்கம் நகர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கூட நட்சத்திர அணிகளுக்காக விளையாடும் வீரர்களுக்கான மதிப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட்டை விடவும் பிரான்சைஸ் கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். அண்மையில் நியூசிலாந்து அணியின் போல்ட், அந்நாட்டு கிரிக்கெட் ஒப்பந்தம் தேவையில்லை என்று வெளியேறினார்.
இதற்கு நியூசிலாந்து அணிக்காக விளையாடும் போது கிடைக்கும் வருவாயை விடவும் பிரான்சைஸ் கிரிக்கெட்டை ஆடும் போது அதிக ஊதியம் கிடைப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்தார். அதன்பின் ஐபிஎல், பிஎஸ்எல், எம்எல்சி, எஸ்ஏ20 லீக் என்று உலகம் முழுவதும் போல்ட் லீக் போட்டிகளில் விளையாட தொடங்கினார். தற்போது இவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
வெறும் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஹசரங்கா விளையாடி இருந்தாலும், ஓய்வுக்கு காரணமாக இனி அதிகமாக பிரான்சைஸ் கிரிக்கெட்டை விளையாட போகிறேன் என்று கூறியுள்ளார். அண்மையில் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த ஹசரங்கா, கடைசி நேரத்தில் மேஜர் லீக் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். முன்னதாக திசாரா பெரேரா இதேபோல் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஓய்வை அறிவித்த போது, அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.