லக்னோ : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய முதல் அணி என்ற சோகமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது.
இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட அரை இறுதி சுற்றுக்கு செல்வது மிகவும் கடினம் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது. மேலும் இலங்கை அணியின் கேப்டன் சனாக காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடாததால் தற்காலிக கேப்டனாக குசல் மெண்டிஸ் தான் களமிறங்கினார்.

ஆனால் இன்றும் இலங்கை அணி தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் தற்காலிக கேப்டன் குசல் மெண்டிஸ், எங்களுடைய அணியின் தொடக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஆனால் ஆட்டத்தின் நடுவில் நாங்கள் தடுமாறினோம். இன்றைய ஆட்டத்தில் மட்டும் ஒரு 300 ரன்கள் அடித்து இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொண்டிருப்போம்.
ஏனென்றால் 300 ரன்கள் இருந்தால்தான் இந்த ஆடுகளத்தில் வெற்றி பெற முடியும். எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம். பல பந்துகளை ரன்கள் அடிக்காமல் வீணடித்து விட்டோம். கடந்த இரண்டு போட்டிகளாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக தான் விளையாடினார்கள். ஆனால் இன்று கொஞ்சம் தடுமாறினார்கள். இன்னும் எங்களுக்கு ஆறு போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
அதில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுடைய பேட்டிங் மீண்டும் ஜொலிக்கும் என நம்புகிறேன். பந்துவீச்சில் மதுசங்கா சிறப்பாகவே பந்து வீசி தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது நம்பிக்கை உரியதாக இருந்தது. அதை போன்று எங்களுடைய கேப்டன் சனக்கா மீண்டு வருவார் என நான் நம்புகிறேன் என்று குஷல் மெண்டிஸ் கூறியுள்ளார்.