
திடீர் விஸ்வரூபம்
தற்போதைய கென்யா, ஜிம்பாப்வே போன்று மதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி விஸ்வரூபம் எடுத்தது, 1990களில்தான். இந்திய வரைபடத்தின் கீழே ஒரு முற்றுப்புள்ளி போல காணப்படும் குட்டி தேசம், கிரிக்கெட் உலகின் சக்கை போடு போடும் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. "100 கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு நாமும்தான் இருக்கிறோமே" என்று இந்திய ரசிகர்களை பொறுமல் அடையச் செய்தது இலங்கையின் அந்த விஸ்வரூபம்.

நட்சத்திர வீரர்கள்
அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான அப்படி ஒரு அணியை இனி இலங்கை ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். ஓப்பனிங்கில் மார்வன் அத்தபத்து, மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் அரவிந்தா டி சில்வா, ரணதுங்கா, ரோஷன் மகனமா, ரமேஷ் கலுவிதரனா என பெரும் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அணி வகுக்க அதில் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் ஜெயசூர்யா.

அதிரடி மன்னன் ஜெயசூர்யா
130 பந்துகளுக்கு 100 ரன்களை தொடுபவர் பெரிய அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப்பட்ட அக்காலகட்டத்தில் அதிரடிக்கு இலக்கணம் எழுதியவர் ஜெயசூர்யா. அப்ரிடி, கில்கிறிஸ்ட், பிரெண்டன் மெக்கல்லம், சேவாக் போன்ற பிற்பாடு அதிரடி நாயகர்களின் அண்ணன் இவர்தான். ஸ்டிரைக் ரேட்டை 100க்கு மேல் வைப்பதற்கு பெயர்தான் அதிரடி என்பதை புடம் போட்டு காட்டியவர் ஜெயசூர்யா. லிஸ்டில் சச்சினை எங்கே என கேட்பது புரிகிறது. கிரிக்கெட்டின் கடவுளை சாதாரண பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடுவது சரியில்லை என்பதால் அவரை குறிப்பிடவில்லை. அவர் லெவல் அப்போவே வேறுதானே.

உலக கோப்பையை வென்ற இலங்கை
மார்க் டெய்லர் தலைமையிலான ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக், மார்க்வாக், பெவன், ஹீலி, மெக்ராத், வார்னே ஆகியோரை கொண்ட பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 1996ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் எளிதில் வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றபோது உலகமே அந்த அணியை திரும்பி பார்த்தது.

வச்சி செய்தார்கள்
இதன்பிறகான சில வருட காலகட்டங்களில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்யும்போதும், இலங்கை இந்தியாவுக்கு வரும்போதும் ரிசல்ட் முன்கூட்டியே எழுதப்பட்டதாக இருந்தது. காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் இல்லாத அந்த காலகட்டத்தில் வெங்கடேச பிரசாத், குருவில்லா, மொஹந்தி போன்ற பவுலர்களை நம்பித்தான் இந்தியா களம் கண்டது. அப்போது கும்ப்ளே மட்டுமே நம்மிடமிருந்த சர்வதேச தரத்திலான ஒரு பவுலர். இந்திய அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்தது இலங்கை. ஜெயசூர்யா, மகனமா போன்ற பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுகளில் அனாயாசமாக 300 ரன்களை கடந்தனர். அதை ஒரு ஹாபி போல செய்தனர். ஒருநாள் போட்டிகளிலும், இந்திய அணியை சிதறவிட்டார் ஜெயசூர்யா.

எழுந்த இந்தியா
நொந்துபோயிருந்த இந்திய அணிக்கு அஜித் அகர்க்கரின் வருகை புத்துயிர் ஊட்டியது. ஜெயசூர்யாவை ரன் குவிக்கவிடாமல் அவுட் செய்து ஆரம்பத்திலேயே இலங்கை முதுகெலும்பை அதிகம் முறை உடைத்தவர் அகர்கர்தான். இதன்பிறகுதான் இந்தியா-இலங்கை போட்டிகளில் ஒரு நியாயதர்மமாவது இருந்தது. இதன்பிறகு ஜாகீர்கான் வருகை, ஸ்ரீநாத்தின் மறுவருகை போன்றவையும், இர்பான் பதானின் அநாயாச ஸ்விங்கும், இந்திய வேகப்பந்து வீச்சு துறையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தின. பிறகு ஜெயசூர்யாவின் ஜம்பம் இந்தியாவிடம் பலிக்கவில்லை.

விடாத இலங்கை
இருப்பினும் இலங்கை ஒரு அணியாக தனக்கான போராட்டத்தைவிடவில்லை. 2011ல் தில்சன், சங்ககாரா, ஜெயவர்த்தனே போன்ற பெயர் சொல்லக்கூடிய 3 பேட்ஸ்மேன்கள்தான் இருந்தபோதிலும், அணியின் ஒட்டுமொத்த உழைப்பால் பைனல் வரை வந்தது இலங்கை. ஆனால் 1996 உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு டோணி தலைமையிலாான இந்திய அணி பழிவாங்கி பைனலில் வென்றது வரலாறு.

டி20 உலக கோப்பை
புதிதாக அறிமுகமான டி20 வகை ஆட்டத்திலும் இலங்கை ஆதிக்கம் காட்டியது. 2014ல் டாக்காவில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது இலங்கை. அப்போதும் அந்த அணி பெரிதாக நம்பியது மலிங்காவையும், குமார் சங்ககாராவையும்தான். ஆனால் ஒரு அணியாக மீண்டும் போராடி வென்றது இலங்கை.

இலங்கையின் வீழ்ச்சி
இதன்பிறகு இலங்கையின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த உலக கோப்பையிலும் சொதப்பிய அந்த அணி பெரிய வெற்றி எதையும் பெறமுடியவில்லை. இப்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் வொய்ட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது. ஒருநாள் போட்டித்தொடரையும் இழந்துள்ளது. 3வது போட்டியில் தோல்வியின் விளிம்பில் இலங்கை தவித்தபோது மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை செய்தனர் ரசிகர்கள். 1996 உலக கோப்பை அரை இறுதியில் சச்சினை தவிர அனைவரும் கைவிட்டு இந்தியா தோற்கும் நிலை வந்தபோது, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் இதையேத்தான் செய்தனர். இப்போது புரிகிறதா வாழ்க்கை ஒரு வட்டம் என்று முதல் பாராவில் கூறியதன் அர்த்தம். அன்று சாதனை நாயகனாக விளங்கிய அதே சனத் ஜெயசூரியா இன்று அவமானத்தால் தலை குனிந்துள்ளார். ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











