சென்னை/ மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை இன்னொரு தனி நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் மாற்றிவிட இந்தியா சிமெண்ட் நிறுவனத் தலைவரும் அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான (BCCI) என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளார்.
இதைச் செய்தால் தான் அவர் மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்குப் போடியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல்.சூதாட்ட வழக்கில் கடந்த 22ம் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டது
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே செயற் குழுக் கூட்டத்துக்கு முன்னதாக சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். கிரிக்கெட் வாரியத்தில் அவருக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளது. இதனால் அவர் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையை விற்றால் தான் சீனிவாசனால் மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியும்.
இதையடுத்து Chennai Super Kings Cricket Ltd என்ற தனி நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் இந்தியா சிமெண்ட் வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பங்குகளை ஒப்படைத்துவிட சீனிவாசம் முடிவு செய்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் அணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களில் இருந்தும் முழுவதுமாக விலகிவிட சீனிவாசம் முடிவு செய்துவிட்டார்.