சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக என். சீனிவாசன் மூன்றாவது முறையாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என். சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் பெட்டிங்கில் சிக்கி கைதானார். இதையடுத்து சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாகிவிட்டது. அவர் ராஜினாமா செய்ததையடுத்து ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் என். சீனிவாசன் வாரியத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் மூன்றாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக குருநாத் மெய்யப்பன் விவகாரம் தொடர்பாக பீகார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், என். சீனிவாசன் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிடலாம், ஆனால் அதில் வெற்றி பெற்றால் தாங்கள் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுப்பேற்கக் கூடாது என்று தெரிவித்துவிட்டது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கிலும் சீனிவாசனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஜெகன் மோகன் ரெட்டி வழக்கு மற்றும் பீகார் கிரிக்கெட் சங்க வழக்குகளில் தீர்ப்பு வந்து சீனிவாசன் குற்றம் அற்றவர் என்று தெரியும் வரை அவர் தலைவராக பொறுப்பேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.