கொழும்பு : உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட ஒரே அணி இந்தியா தான். எந்த நாட்டுக்கு இந்தியா கிரிக்கெட் ஆடச் சென்றாலும் அங்கே குறைந்தபட்சம் பாதி அரங்கம் நிரம்பும் அளவுக்காவது ரசிகர்கள் வந்து விடுவார்கள்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இதை பல முறை பார்த்திருக்கிறோம்.
ஆனால், இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நிலைமை நேர்மாறாக உள்ளது.

குறைந்து கொண்டே போன ரசிகர்கள் : 2023 ஆசிய கோப்பை தொடர் இலங்கையிலும், பாகிஸ்தானிலுமாக நடைபெற்றது. அதில் அதிக போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. துவக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு ஓரளவு ரசிகர்கள் வந்தார்கள். ஆனாலும், அரங்கம் நிறையவில்லை. இலங்கை ஆடும் போட்டிகள் தவிர மற்ற போட்டிகளுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் இருந்தனர்.
இந்தியா - வங்கதேசம் போட்டி : அதிலும், கடைசியாக இந்தியா - வங்கதேசம் மோதிய சூப்பர் 4 போட்டிக்கு 100, 200 ரசிகர்கள் வந்திருப்பார்களா? என்ற சந்தேகமே எழுந்தது. அந்த அளவுக்கு அரங்கம் காலியாக இருந்தது. ஊழியர்கள் எண்ணிக்கை தான் ரசிகர்களை விட அதிகமாக இருந்தது.
விராட் கோலி தான் காரணமா? : சில இந்திய ரசிகர்கள், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஆடவில்லை. அதனால் தான் ரசிகர்கள் வரவில்லை எனக் கூறி வருகிறார்கள். ஆனால், அதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. காரணம், போட்டி துவங்கிய பின் தான் விராட் கோலிக்கு ஓய்வு அளித்திருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
என்ன காரணம்? : இந்த நிலையில், ரசிகர்கள் வராமல் போனதற்கு டிக்கெட் விலை அதிகமாக இருந்ததுதான் காரணம். இந்தியாவில் இருந்து இந்த தொடரை நேரில் பார்க்க விரும்பிய ரசிகர்கள் பலரின் ஆர்வம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் மீது தான் இருந்தது. ஆனால், இலங்கையில் இது மழைக்காலம் என்பதால் பல ரசிகர்கள் இலங்கை சென்று போட்டியை பார்க்கும் எண்ணத்தை கை விட்டனர். அப்படியென்றால் இலங்கை மக்கள் தான் இந்தப் போட்டியை காண வர வேண்டும். அவர்களும் இதை முற்றிலும் புறக்கணிக்க காரணம் அதிக டிக்கெட் விலை தான்.
அதிக விலை : பொதுவாக இலங்கையின் பண மதிப்பில் 100, 200 ரூபாய்க்குதான் இலங்கை அணி ஆடும் போட்டிகளுக்கு டிக்கெட் விற்கப்படும். ஆனால், இந்த முறை தொடரை நடத்தும் பொறுப்பை ஏற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிரடியாக 2000 முதல் 10,000 ரூபாய் வரை டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது. ஆனால், அதை இலங்கை ரசிகர்கள் புறக்கணித்தனர்.
விலை குறைத்தாலும் வர முடியாது : அதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் இதில் தலையிட்டு டிக்கெட் விலையை 90 சதவீதம் குறைத்தது. அதன் காரணமாக இலங்கை - பாகிஸ்தான் ஆடிய போட்டிக்கு மட்டும் உள்ளூர் ரசிகர்களால் அரங்கம் நிறைந்தது. ஆனால், இந்தியா - வங்கதேசம் ஆடிய போட்டிக்கு யாருமே வரவில்லை. இது முக்கியத்துவமற்ற போட்டி என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை முற்றிலும் புறக்கணித்து இருக்கின்றனர்.
இறுதிப் போட்டி நிலை : இதில் ஒரே ஒரு ஆறுதலாக இறுதிப் போட்டிக்கு பாதி டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்பதாக நினைத்து பல இந்திய ரசிகர்கள் இறுதி போட்டிக்கு டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், தற்போது இலங்கை - இந்தியா இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அந்தப் போட்டியாவது அரங்கம் நிறைந்து நடைபெறுகிறதா? என பார்க்கலாம்.