சென்னை: சென்னையில் நாளை நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு முதல்வர் லெவன் அணிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக விளையாட்டு வளர்ச்சி ஆணைய உறுப்பினர் செயலாளர் சத்யப்ரதா சாஹூ கூறுகையில், தமிழகத்திற்கும், தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் ஒரு நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை இப்போட்டி மெரீனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். தமிழக முதல்வர் லெவன் அணிக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார்.தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு அந்த மாநில முதல்வர் மைக் ரான் தலைமை தாங்குவார்.வெற்றி பெறுபவர்களுக்கு ஆளுநர் பர்னாலா கோப்பையை வழங்குவார். தமிழக முதல்வர் லெவன் அணியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் இடம் பெறுவர். திரைப்பட நடிகர்களும் இடம் பெறுகிறார்கள் என்றார்.