சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்தோடு வீட்டில் இருந்தபடி பார்த்து ரசித்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து பாகிஸ்தானுக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு இணையாக கருதப்படும் இந்த ஆட்டத்தினை உலகத்தின் பல்வேறு பகுதியில் இருப்போரும் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.
போட்டியை நேரில் காணும் ஆர்வத்தில் ஓவல் மைதானத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் டிக்கெட் வாங்கிச் சென்றுள்ளனர். இவர்கள் தவிர வீட்டிலிருந்தபடியும் ஆயிரக்கணக்கானோர் டிவி வாயிலாக இந்த விறுவிறுப்பான போட்டியை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலினும் தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் உடன் சேர்ந்து வீட்டில் அமர்ந்தபடி இப்போட்டியை ரசித்து வருகிறாராம். இதனை அவரே தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முந்தைய தனது பதிவில், 'இந்திய அணிக்கு வாழ்த்து' தெரிவித்திருந்த ஸ்டாலின், நிச்சயமாக இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என நம்பிக்கைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.