"உங்க சங்காத்தமே வேண்டாம்" ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்காத இந்திய வீரர்கள்.. முக்கிய முடிவு எடுத்த புஜாரா!
மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர்களான புஜாரா மற்றும் விஹாரி ஆகியோர் தங்களது பெயர்களை பதிவு செய்யவில்லை. இதனால் ஐபிஎல் தொடரின் போது இருவரும் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் மொத்தம் 185 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள். அதேபோல் 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

மொத்த வீரர்கள் எவ்வளவு
இதில் கத்துக்குட்டி நாடுகளை சேர்ந்த 20 பேர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 57 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள பெயரை பதிவு செய்துள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 33 வீரர்களும் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர்.

இந்திய வீரர்கள் பதிவு
இதுமட்டுமல்லாமல் ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட மயங்க் அகர்வால், ரஹானே, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா உள்ளிட்ட வீரர்கள் மினி ஏலத்தில் கலந்துகொள்ள பெயரை பதிவு செய்துள்ளனர்.

புஜாரா, விஹாரி
ஆனால் இந்திய அணி டெஸ்ட் அணிக்காக விளையாடி வரும் புஜாரா, விஹாரி ஆகியோர் தங்களது பெயர்களை ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யவில்லை. 2020ம் ஆண்டு ஏலத்தின் போது புஜாரா சென்னை அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டு, ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இதன்பின்னர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் புஜாரா மற்றும் விஹாரி ஆகியோர் கவனம் செலுத்த தொடங்கினர்.

இங்கிலாந்து கவுண்டி?
இருப்பினும் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க புஜாரா, விஹாரி ஆகியோர் தவறியதே இல்லை. ஆனால் இம்முறை புஜாரா மற்றும் விஹாரி ஆகிய இருவருமே ஏலத்தில் பங்கேற்க பெயர்களை பதிவு செய்யவில்லை. இதன் மூலம் இருவரும் இங்கிலாந்தில் நடக்க உள்ள கவுண்டி அணிக்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications