நியூசிலாந்து: பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது.
இந்த தொடரில் வெற்றி பெற்றதால் டி20 உலகக்கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதில் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அந்த அணியின் அதிரடி வீரரான ஆசிஃப் அலி காலில் ஏற்பட்டுள்ளதால் பெரும் பின்னடைவு உருவாகியுள்ளது. நியூசிலாந்துடனான இறுதிப்போட்டியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நியூசிலாந்து இன்னிங்ஸில், முகமது வாசிம் வீசிய பந்தை கான்வே பவுண்டரிக்கு அடிக்க, அதனை தடுக்க முயன்ற போது, ஆசிப் அலி டைவ் அடித்து கீழே விழுந்தார். வேகமாக சென்றதால் கால் மூட்டு பகுதி தரையில் வேகமாக உராசியது. இதனால் காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவக்குழு அழைத்து சென்றனர். இதன்பின்னர் போட்டி முழுவதும் அவர் வரவே இல்லை.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் பணிக்கு இருப்பது போன்று பாகிஸ்தான் அணிக்கு ஆசிஃப் அலி இருக்கிறார். கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தும் திறமைக்கொண்டவர். பாகிஸ்தான் அணியில் தற்போது ஓப்பனிங் வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மட்டுமே நம்பிக்கை தரும் நிலையில் ஆசிஃப் அலியும் காயமடைந்திருப்பதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.