டெஸ்ட் தொடர் முழுசா இங்க இருந்தது சிறப்பானது... திறமையை வளர்த்துக்க முடிஞ்சுது.. சுந்தர் பரபர!
பிரிஸ்பேன் : தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் 301 வீரராக இவர் இடம்பெற்றுள்ளார். மேலும் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் தொடர் முழுமையிலும் இந்திய அணியுடன் தான் இருந்தது தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவியதாக சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று துவங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளின் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்துள்ளது.

நடராஜன் 2 விக்கெட்டுகள்
இந்த போட்டியில் மூத்த வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில், தங்களது சர்வதேச முதல் டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் இடம்பெற்றனர். தேர்வாளர்களின் நம்பிக்கையை பொய்யாக்காதவண்ணம் சுந்தர், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். நடராஜனும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிறப்பான பயிற்சி
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக இங்கிருக்க கேட்டுக் கொண்ட அணி நிர்வாகத்திற்கு வாஷிங்டன் சுந்தர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இதன்மூலம் சிறப்பாக பயிற்சி பெற்றதாக அவர் கூறினார். இந்திய அணியின் 301வது டெஸ்ட் வீரரராக அணியில் இணைந்துள்ள அவர் டெஸ்ட் போட்டியில் தான் இணைந்தது கனவு நனவான தருணம் என்றும் இதை தன்னுடைய குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

சிறப்பான சந்தர்ப்பம்
மேலும் இந்தியாவிற்காக விளையாடுவது சிறப்பான சந்தர்ப்பம் என்றும், டெஸ்ட் போட்டியில் விளையாடியது மிகவும் அற்புதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். முதல் பந்தை பௌலிங் செய்தது மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications