“அந்த 48 மணி நேரத்தை மறக்கவே முடியாது”.. அவமானப்படுத்திய அதே நாட்டில் 8 ஆண்டுக்கு பின் ஸ்டீவ் ஸ்மித்
ஜோஹன்னஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரின் மூலம், கிரிக்கெட் உலகையே உலுக்கிய "பால் டேம்பரிங்" சர்ச்சைக்குப் பிறகு, சுமார் 8 ஆண்டுகள் கழித்து ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார்.
2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் ஆடியது ஆஸ்திரேலிய அணி. அப்போது ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பான்கிராப்ட் உப்புத்தாளை வைத்து பந்தை சேதப்படுத்தி சிக்கினார். அதன் பின்னணியில் அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கும் சேர்த்து ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. அதே தென்னாப்பிரிக்காவுக்கு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் டெஸ்ட் தொடரில் ஆடச் செல்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்டீவ் ஸ்மித், தனது வாழ்நாளின் மிக மோசமான தருணங்களை வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். "இப்போதும் கேமராக்களின் வெளிச்சத்தைப் பார்த்தால் எனக்குள் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அப்போது நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் இன்றும் அவ்வப்போது என் கண்முன்னே வந்து போகின்றன. எனக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்த அந்த 24 முதல் 48 மணி நேரத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்தில் மக்கள் என்னை சூழ்ந்துகொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டதும், அதன்பின்னர் கண்ணீருடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதும் இப்போதும் நினைவில் இருக்கிறது. அது என் வாழ்க்கையின் மிகக் கொடூரமான காலகட்டம். அந்த மோசமான நினைவுகளை என் மனதில் இருந்து முற்றிலுமாக அழிக்க முயற்சி செய்துவிட்டேன். அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னோக்கி நகர்ந்துவிட்டேன்" என்று ஸ்மித் உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் மைதானங்களில் ரசிகர்கள் எழுப்பும் எதிர்ப்பு கூச்சல்கள் குறித்துப் பேசிய அவர், "வெளிநாட்டு மைதானங்களில் ரசிகர்கள் என்னை கேலி செய்வதற்கு நான் பழகிவிட்டேன். 2019 உலகக் கோப்பையில் என்னை நோக்கி ரசிகர்கள் கூச்சலிட்டபோது அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி அதை தடுத்து நிறுத்தியதை மறக்க முடியாது. இப்போது ரசிகர்கள் என்னை நோக்கி எழுப்பும் எதிர்மறை விமர்சனங்களை, களத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான உத்வேகமாக மாற்றிக்கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications

