லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஐசிசி கோப்பையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியால் வெல்ல முடியவில்லை என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு, திறமையான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
அதற்கேற்ப ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் உடனடியாகவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் அறிமுகப் போட்டியிலேயே இமாலய சதம் விளாசி மிரட்டினார்.

இதனால் சீனியர் வீரரான புஜாரா மீண்டும் அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு மற்றும் அதிக மன வலிமை கொண்ட வீரர்களாக உள்ளனர். இதனால் இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். இதனால் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இருவரும் காயமடைந்தால் மட்டுமே புஜாரா மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து ஒருநாள் கோப்பை தொடரில் சசக்ஸ் அணிக்காக நட்சத்திர வீரர் புஜாரா சதங்களாக விளாசி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் கூட சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அசத்தினார். இந்த ஆட்டம் குறித்து புஜாரா பேசுகையில், இந்திய அணியில் எனக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை என்று பார்க்கிறேன். அடுத்த உள்ளூர் கிரிக்கெட் சீசனில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தால் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.
ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசி எனக்கு அனலாக இருக்கிறது. அதனால் என்னுள் இன்னும் கிரிக்கெட் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. வழக்கம் போல் ஒவ்வொரு போட்டியாக அணுகி வருகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி, ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதே எனது திட்டமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் புஜாராவின் கம்பேக்கிற்கு வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.