
டி20 தொடரில் இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. தொடரை வெற்றி கொள்ள இங்கிலாந்து அணி இறுதிவரை போராடியது. ஆனால் ஒரு சில வீரர்களை தவிர்த்து இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டங்களை அளிக்கவில்லை.

பென் ஸ்டோக்ஸ் சொதப்பல்
அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 5 போட்டிகளிலும் சேர்த்து 84 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை மட்டுமே அவர் வீழ்த்தினார். அவரது ஆட்டம் தற்போது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டோக்ஸ் நிரூபிக்க வேண்டும்
இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அவர் சிறப்பான வெற்றி வீரராக இருந்தாலும் டி20 போட்டிகளில் அவர் தனது திறமையை இன்னும் நிரூபிக்க வில்லை என்றும் ஹுசைன் கூறியுள்ளார்.

மலானை ஸ்டோக்ஸ் முந்த வேண்டும்
அணியின் டேவிட் மலான் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள நிலையில். இதுவரை இந்த வடிவத்தில் எந்தவிதமான சிறப்பான ஆட்டத்தையும் அளிக்காத பென் ஸ்டோக்ஸ், மலானை முந்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல்லிலும் ஸ்டோக்ஸ் பங்கேற்பு
டி20 போட்டிகளில் சரியான ஆட்டத்தை அளிக்காத பென் ஸ்டோக்ஸ், அடுத்ததாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.


Click it and Unblock the Notifications











