அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி சர்வதேச கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார். சாய் சுதர்சன் கடந்து வந்த பயணம் பற்றி பார்க்கலாம்.
ஒரேயொரு இன்னிங்ஸ் மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை தான் யார் என்பதை தேட வைத்துள்ளார் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோரை வீழ்த்தினால் போதும் என்று நினைத்திருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு, பேரிடியாக இறங்கியுள்ளார் சாய் சுதர்சன்.

47 பந்துகளில் 96 ரன்களை விளாசி குஜராத் அணிக்கு இரண்டாவது கோப்பையையே வென்று கொடுத்துவிட்டார் என்றே சொல்லலாம். துஷார் தேஷ்பாண்டேவுக்கு எதிராக அடிக்க பவுண்டரிகள், பதிராணாவுக்கு எதிரான அடித்த சிக்சர்கள் இனி காலத்திற்கும் ஐபிஎல் வரலாற்றில் சாய் சுதர்சன் பெயரை சொல்லப் போகிறது.
இவரது ஆட்டத்தை பார்த்து சுனில் கவாஸ்கர் முதல் ஹெய்டன் வரை ஜாம்பவான் வீரர்கள் பலரும் புகழ்கிறார்கள். 21 வயது பையனுக்கு இவ்வளவு திறமையா என்று வியக்கிறார்கள். ஆனால் 21 வயதான சாய் சுதர்சனின் பயணம் மிக நீண்டது. வாலி பால் வீராங்கனையான தாய்-க்கும், விளையாட்டு வீரரான தந்தைக்கும் பிறந்தவர் தான் சாய் சுதர்சன். அதனால் சிறு வயது முதலே விளையாட்டில் ஈடுபடுவதற்கு எந்த தடையும் இல்லை.
இதனால் இயற்கையாகவே சாய் சுதர்சனுக்கு கிரிக்கெட் மீது பற்று வந்தது. இன்னும் சொல்லப் போனால் மும்பை அணிக்காக ஆடிய திலக் வர்மா, குஜராத அணிக்காக ஆடி வரும் சாய் சுதர்சன் உள்ளிட்ட அனைவரும் யு-14 கிரிக்கெட் தொடர்களில் எதிர் எதிர் அணிகளாக விளையாடியவர்கள். அப்போதைய தென் மண்டல யு-14 தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் திலக் வர்மா முதலிடம் பிடித்தார் என்றால், சாய் சுதர்சன் 4வது இடம் பிடித்தார்.
முதலிடத்தில் வந்தவருக்கே இங்கு பேரும், புகழும். மீதமிருப்பவர்களை இந்த உலகம் கண்டுகொள்ளாது. அங்கிருந்துதான் சாய் சுதர்சனின் உண்மையான பயணம் தொடங்கியது. வினோத் மன்கட் டிராபி, யு-19 சேலஞ்சர் டிராபி என்று அத்தனை தொடர்களிலும் தனது முத்திரையை பதித்துக் கொண்டே வந்தார் சாய் சுதர்சன். அப்போதுதான் சாய் சுதர்சனின் திறமையை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக ஒரு வாய்ப்பு டிஎன்பிஎல் மூலமாக கிடைத்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஓராண்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்ட பின், அடுத்த ஆண்டு கோவை லைகா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 19 வயது சாய் சுதர்சன் என்ன செய்துவிடுவார் என்று யோசித்த போது, சேலம் அணிக்கு எதிரான போட்டியில் பொளந்து கட்டிவிட்டார் என்றே கூறலாம். 43 பந்துகளில் 87 ரன்கள்.. அதில் 5 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளும் அடங்கும். இன்னும் சொல்லப் போனால், அன்று சேப்பாக்கம் மைதானத்தில் இவரது பேட்டில் இருந்து ஒரு புயலே உருவானது.
இன்று டிஎன்பிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்க்கப்பட்ட வீரர் சாய் சுதர்சன் தான். ஐபிஎல் தொடரின் மூலம் கிடைக்கும் தொகையை விட டிஎன்பிஎல் தொடரில் சாய் சுதர்சன் அதிக வருவாயை ஈட்டி வருகிறார். இந்த நிலையில் தான் கேன் வில்லியம்சன் காயமடைந்து வெளியேறிய பின், அந்த இடம் சாய் சுதர்சனுக்கு கிடைத்தது. வெறும் 2 போட்டிகளில் அனைவருக்கும் தனது திறமையை நிரூபித்தார் என்றே சொல்லலாம்.
ஆனால் திறமையாளர்கள் நிறைந்த குஜராத் அணிக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் சாய் சுதர்சனின் ஆட்டம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 3வது இடத்தில் இறங்கி நிதானம் காட்டுவதால் குஜராத் அணியின் ரன் ரேட் பாதிக்கப்படுவதாக நினைத்தனர். இதனால் ஹர்திக் பாண்டியாவே நேரடியாக 3வது இடத்தில் களமிறங்க தொடங்கினார். இதன் விளைவால், சாய் சுதர்சனுக்கு அணியில் இடமில்லை. இந்த நிலையில் குவாலிஃபையர் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான குஜராத்தின் தோல்வி, மீண்டும் சாய் சுதர்சனுக்கு கதவுகளை திறந்தது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சன் களமிறங்கினாலும், தேவைக்கேற்ப அதிரடிக்கு அவரால் மாற முடியவில்லை. இதனால் குஜராத் அணி நிர்வாகம் சாய் சுதர்சன் 19வது ஓவரில் ரிட்டயர்ட் அவுட்டாகி வெளியேற்றியது. இந்த நடவடிக்கை தான் சாய் சுதர்சன் மனதில் நெருப்பாக அமைந்தது. அந்த நெருப்பை இறுதிப்போட்டியில் காட்டியுள்ளார் சாய் சுதர்சன்.
எந்த கேப்டன் ரிட்டயர்ட் அவுட்டாக்கி வெளியேற சொன்னதோ, அதே கேப்டன் இன்று அவுட் என்று வெளியேறிய போதும் மேல்முறையீடு செய்ய நிர்பந்தித்தார். இனி எத்தனை ஆண்டுகள ஆனாலும் 21 வயது மட்டுமே ஆன தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரன் ஒருவனின் ஆட்டம் ஐபிஎல் வரலாற்றில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். இனி சாய் சுதர்சனின் ஆட்டம் உச்சத்தை நோக்கிய பயணமாகவே இருக்க போகிறது.