டெல்லி: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியில், ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பி்ன்னி சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் நீக்கப்படும் வீரர் யார் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு பெரும் பாதகமாக முடிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான அணியல் திடீரென ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டர் மூலம் தகவல் வெளியிட்டுள்ள பிசிசிஐ, யாருக்குப் பதில், பின்னி சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவிக்கவில்லை.
இந்திய அணியில் முரளி விஜய் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அதேசமயம், முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஷிகர் தவானுக்கும் விரலில் காயம் ஏற்பட்டது.
முரளி விஜய் 2வது போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அணியில் காயமடைந்துள்ளதாகத் தெரியவில்லை.
எனவே இவர்களில் யாரேனும் ஒருவர் நீக்கப்படலாமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இருப்பினும் கூடுதல் வீரராக பின்னி அணியில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது.