லண்டன்: 2007 டி20 உலகக் கோப்பையில், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை வாரி வழங்கிய தனது மகன் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு, யுவராஜ் சிங் கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சியை கிறிஸ்துமஸ் பரிசாக அளித்ததாகவும், ஆனால் அதை அவர் கோபத்தில் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாகவும் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார் பிராட்-இன் தந்தையும், முன்னாள் ஐசிசி போட்டி நடுவருமான கிறிஸ் பிராட்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று யுவராஜ் சிங் ஒரே ஓவரில் அடித்த ஆறு சிக்ஸர்கள். 2007-ல் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில், யுவராஜ் சிங் வரிசையாக ஆறு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இருந்தார். இந்த நிகழ்வு யுவராஜ் சிங்கிற்கு வரலாற்றுப் பெருமையைத் தேடித் தந்தாலும், அப்போது இளம் வீரராக இருந்த ஸ்டூவர்ட் பிராட்டிற்கு அது ஒரு மோசமான அனுபவமாக அமைந்தது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து, கிறிஸ் பிராட் சமீபத்தில் 'தி டெலிகிராஃப்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார். கிறிஸ் பிராட் கூறியதாவது: "யுவராஜ் சிங்கிடம் ஆறு சிக்ஸர்கள் அடி வாங்கிய பிறகு, நான் செய்த ஒரு காரியத்தை அவர் விரும்பவில்லை. அந்த உலகக் கோப்பை முடிந்ததும், நான் யுவராஜ் சிங்கிடம் இந்திய அணி ஜெர்சி ஒன்றில் கையெழுத்து வாங்கி, அதை ஸ்டூவர்டுக்கு கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்தேன். அவர் அந்தப் பரிசைத் திறந்து பார்த்ததும், கோபத்தில் அதை அப்படியே குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டார். எனது நகைச்சுவையை அவரால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன்."
அந்தச் சமயத்தில், கிரிக்கெட் வரலாற்றின் தவறான சூழ்நிலையில் சிக்கியதால், ஸ்டூவர்ட் பிராட் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். சக வீரர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபத்தின் உச்சியில் இருந்த யுவராஜ் சிங்கிடம் ஸ்டூவர்ட் பிராட் சிக்கிக்கொண்டார். ஆனால், ஒரு தந்தையாக, தனது மகனை மேலும் சீண்டும் விதமாகப் பிரிட்டிஷ் பாணியில் நகைச்சுவையாகக் கிறிஸ் பிராட் செய்த இந்தச் செயல், ஸ்டூவர்ட்டுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மோசமான சம்பவத்திலிருந்து ஸ்டூவர்ட் பிராட் விரைவாக மீண்டு வந்தார். அதன் பிறகு அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கை பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜாம்பவானாக உருவெடுத்தார். கடந்த ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை, 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 604 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக இருந்த கிறிஸ் பிராட், தனது மகன் பேட்டிங்கில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை என்று ஆதங்கப்பட்டார். ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3662 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது சராசரி வெறும் 18.03 மட்டுமே.
இதுகுறித்த ஒரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். "ஒருமுறை, சீசனின் ஆரம்பத்தில், டிரென்ட் பிரிட்ஜில் உள்ள வலைப்பயிற்சிக்கு என்னை அழைத்து, பந்து வீசுமாறு கேட்டான். நாங்கள் ஒரு மணி நேரம் ஒன்றாகப் பயிற்சி செய்தோம். அதன்பிறகு இங்கிலாந்துக்காகச் சில ரன்களை எடுத்தான். ஆனால், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, 'எனது பேட்டிங்கிற்கு உதவிய பயிற்சியாளர் பால் ஃபார்பிரேஸுக்கு நன்றி' என்று கூறினான்."
"அடேய்... உன் அப்பாவுக்கு நன்றி இல்லையா? என நான் அவரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, 'அரசியல் ரீதியாக நான் சரியானதைச் சொல்ல வேண்டும்' என்றான். அது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. 'நான் ஒரு பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன் அல்ல' என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் அதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், அவர் இன்னும் சிறந்த பேட்ஸ்மேனாக வந்திருக்க முடியும்" என்று கிறிஸ் பிராட் கூறினார்.