
கிரிக்கெட் தொடர்கள்
ஜூலை மாதத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

முன்னெச்சரிக்கை
கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் உலகை விட்டு நீங்காத நிலையில், கிரிக்கெட் போட்டிகளை அதிக முன்னெச்சரிக்கையுடன் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக உயிர் பாதுகாப்பு வளையத்தை (Bio secure bubble) உருவாக்கி வருகின்றன கிரிக்கெட் அணிகள்.

காலி மைதானத்தில் போட்டி
மைதானத்தில் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது. காலி மைதானத்தில் தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என ஒரு தரப்பில் கூறப்படுகிறது. மறுபுறம், காலி மைதானத்தில் ஆடும் போது என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி பேசப்படுகிறது.

ஸ்டம்பு மைக்
அதில் முக்கியமானது ஸ்டம்பு மைக். ரசிகர்கள் இருக்கும் போது ஸ்டம்பு மைக்குகளில் அத்தனை தெளிவாக வீரர்கள் பேசுவது கேட்காது. அப்படி இருந்தும் பல முறை வீரர்கள் பேசும் சில விஷயங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தும்.

சர்ச்சை பேச்சு
போட்டியின் வேகத்தில், அழுத்தத்தில் எதிரணி வீரர்களை வம்பிழுப்பது, சர்ச்சையான முறையில் பேசுவது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது ஆகியவை நேரலையில் பலமுறை ஒளிபரப்பாகி உள்ளது. ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் இது இன்னும் அதிகரிக்கும்.

தொலைக்காட்சிகள் திட்டம்
தொலைக்காட்சிகள் ரசிகர்கள் இல்லாததால் பார்வையாளர்களுக்கு ஏற்படும் தொய்வை போக்க, ஸ்டம்பு மைக்கில் வீரர்கள் பேசுவதை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் வீரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

தண்டனை பெற்ற வீரர்கள்
இதற்கு முன் சர்ச்சையாக பேசி ஐசிசி விதிப்படி தண்டனை பெற்ற வீரர்கள் பலர் உள்ளனர். பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது, இன ரீதியாக தென்னாப்பிரிக்கா வேகப் பந்துவீச்சாளர் பெஹ்ளுக்வாயோவை பேசியது நேரலையில் ஒளிபரப்பாகி அவர் தடை பெற்றார்.

கவனம் தேவை
அதே போல, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷானான் கேப்ரியல் ஒரு முறை தண்டனை பெற்றார். கொரோனா வைரஸால் ஏற்கனவே, போட்டியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீண்ட முன்னெச்சரிக்கை விதிமுறைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டம்ப் மைக் போன்ற விஷயங்களிலும் வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications