இந்திய அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளரை நியமித்த பிசிசிஐ.. யார் இந்த சுபதீப் கோஷ்? வெளியான தகவல்
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அசாமை சேர்ந்த முன்னாள் வீரர் சுபதீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி திலீப்பின் ஒப்பந்தம் முடிந்ததை தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1994 முதல் 2004 வரை அசாம் மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்காக 17 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள சுபதீப் கோஷ், சிறந்த பயிற்சியாளராகப் பெயர் பெற்றவர். இவர் அசாம் மாநில அணியின் தலைமை பயிற்சியாளராகவும், பிசிசிஐ-யின் கீழ் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் (என்சிஏ) பணியாற்றியுள்ளார். மேலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியா ஏ மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுடனும் பயிற்சியாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த உயரிய பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தங்களுக்குப் பெருமை அளிப்பதாக அசாம் கிரிக்கெட் சங்கம் இந்த நியமனம் குறித்து தெரிவித்துள்ளது.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து டி திலீப் மற்றும் உதவி பயிற்சியாளர் ரியான் டெஸ்கோட் ஆகியோர் ஒப்பந்தம் முடிந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து, தற்போது சிதான்ஷு கோடக் பேட்டிங் பயிற்சியாளராகவும், மோர்னே மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் உள்ள நிலையில், சுபதீப் கோஷ் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்க உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரே இவரது முதல் பணியாக அமையவுள்ளது.
மறுபுறம், இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான ரியான் டெஸ்கோட், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் கிரிக்கெட் வியூகத் தலைவராக புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் சிபிஎல் (Caribbean Premier League) தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், ஐஎல்டி20 தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் எம்எல்சி தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உதவி பயிற்சியாளராகவும், வீரர்களைத் தேர்வு செய்யும் முக்கியப் பொறுப்பிலும் செயல்பட உள்ளார்.


Click it and Unblock the Notifications
