அடுத்த மாதம் ஏலம்
ஐபிஎல் 2021 தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் -மே மாதங்களில் வழக்கம் போல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 11ம் தேதி சிறிய அளவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 8 ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்புகளை செய்து வருகின்றன.
வெளியிட்ட எஸ்ஆர்எச்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தன்னுடைய அணியில் தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்பை செய்துள்ளது. அணியில் கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், ரஷீத் கான், டி நடராஜன், ஜேசன் ஹோல்டர், ஜானி பேர்ஸ்டோ, விரித்திமான் சாஹா உள்ளிட்ட வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ஆர்எச் அறிவிப்பு
இந்நிலையில் பேபியன் ஆலன், பில்லி ஸ்டேன்லேக், சஞ்சய் யாதவ், சந்திப் மற்றும் பிரித்வி ராஜ் ஆகிய வீரர்களை விடுவிக்கவுள்ளதாக எஸ்ஆர்எச் அறிவித்துள்ளது. மேலும் இந்த 14வது ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது சன்ரைசர்ஸ்.
மேம்பட்ட ஆட்டம்
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மேம்பட்ட ஆட்டங்களை அளித்துள்ளது. கடந்த 2016ல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கடந்த சீசனில் ப்ளே -ஆப் சுற்றிற்கு முன்னேறியது. ஆரம்பத்தில் சொதப்பலான ஆட்டங்களை தந்த அந்த அணி தொடர்ந்து சுதாரித்து சிறப்பாக ஆடியது.