
பந்துகள் பறந்தன
தொடக்க வீரர்களாக வார்னரும், பெர்ஸ்டோவும் களம் கண்டனர். இருவரும் கொல்கத்தா பந்துகளை சிதறடித்தனர். ஒரு பக்கம் பெர்ஸ்டோவ் நிதானமாக ஆட, மறு பக்கம் வார்னர் பந்துகளை பறக்கவிட்டார்.

துவைத்த வார்னர்
கொல்கத்தா பந்துவீச்சை வார்னர் துவைத்து எடுத்தார். தொடக்கம் முதலே பியூஷ் சாவ்லாவின் பந்தை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் விரட்டினார். அணியின் ஸ்கோரும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரையும் பிரிக்க கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

பிரிந்த ஜோடி
இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்து வலுவான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 118 ரன்களாக இருந்த போது பெர்ஸ்டோவ் வீழ்ந்தார்.

வந்தார் விஜய் சங்கர்
எந்த பவுலரின் பந்தை இருவரும் பதம் பார்த்தனரோ அதே சாவ்லா பந்தில் பெர்ஸ்டோவ் போல்டானார். அதை தொடர்ந்து, விஜய் சங்கர் களமிறங்கினார். மறுபுறத்தில் நங்கூரமாக நின்ற வார்னர் ரன்களாக எடுத்து தள்ளினார். அவரை கட்டுப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை.

85 ரன்னில் அவுட்
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 85 ரன்களில் ரசல் பந்தில் உத்தப்பாவிடம் கேட்சானார். அவருக்கு வந்த யூசுப் பதான் ஏன்தான் விளையாட வந்தோம் என்ற கணக்கில் ஆடினார். 1 ரன்னில் ரசல் பந்தில் போல்டானார். அவரை தொடர்ந்து மணீஷ் பாண்டே வந்தார்.

181 ரன்கள் குவிப்பு
ஆனால்.. விஜய் சங்கரோ கிடைத்த பந்துகளை பவுண்டரியாகவும், சிக்சர்களாகவும் மாற்றினார். முடிவில் 20 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.

அற்புதமான ரன்கள்
கடைசி கட்டத்தில், அற்புதமாக ஆடிய விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 40 ரன்களை குவித்தார். அவர் அடித்த ரன்கள், இறுதி ஓவர்களில் அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தது.


Click it and Unblock the Notifications











