இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட்டில் டோணி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டாரா?
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான 2014ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய அணியின் முன்னாள் மேலாளரும் டெல்லி கிரிக்கெட் சங்க செயலருமான சுனில்தேவ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் தாம் அவ்வாறு கூறவே இல்லை என சுனில்தேவ் மறுத்துள்ளார்.
இந்தி நாளிதழ் ஒன்றில் சுனில் தேவ் கூறியதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
மான்செஸ்டரில் 2 நாட்கள் பெய்த மழையால் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தின் பிட்ச் ஈரப்பதமாக இருந்தது. இது பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம். வீரர்கள் உடைமாற்றும் அறையில் நடைபெற்ற ஆலோசனையின் போது டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்வதாக முடிவு செய்யபட்டது.

டாஸ் முடிவை மாற்றிய டோணி
ஆனால் மைதானத்துக்குள் டோணி முடிவை மாற்றினார். டாஸ் வென்றதும் டோணி பேட்டிங்கை திடீரென முதலில் தேர்வு செய்ததார். இதில் 100% மேட்ச் பிக்ஸிங் நடைபெற்று உள்ளது.

சீனியிடம் புகார்
அப்போதைய பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனுக்கும் இது குறித்து புகார் கடிதமும் அளித்தேன். ஆனால் அவர் நம்பவில்லை. அத்துடன் யாரும் இதனை நம்பவும் மாட்டார்கள் என்று சீனிவாசன் என்னிடம் கூறினார் என சுனில்தேவ் கூறியதாக அச்செய்தி வெளியாகி இருந்தது.

பெரும் பரபரப்பு
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கேப்டனான டோணி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது. டோணியுமா இப்படி? என கிரிக்கெட் ரசிகர்கள் நொந்து போயினர்.

சுனில்தேவ் மறுப்பு
இந்த நிலையில் தாம் அப்படி ஒரு பேட்டியே அளிக்கவில்லை; எல்லாமே அபத்தமானது. இந்த செய்தியை வெளியிட்ட இந்தி நாளிதழ் மீது வழக்கு தொடரப்போகிறேன். இப்படியான கருத்துகளை யார் பரப்பினாலும் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பேன் என கொந்தளித்திருக்கிறார் சுனில் தேவ்.
இதனால் டோணி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக எழுந்த பரபரப்பு அப்படியே அடங்கி போனது. கிரிக்கெட் ரசிகர்களும் அப்பாடா என நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications