மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில் மிக நெருக்கடியான கட்டத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிராக 56 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம் அணியில் தன்னுடைய இடத்தை ஸ்ரேயாஸ் உறுதி செய்து கொண்டார். இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன், கவாஸ்கர் ஸ்ரேயாஸ் பற்றி பேசும் போது நாசர் ஹூசைன் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் தமக்கு நிரந்தர இடம் வேண்டும் என்பது குறித்து எல்லாம் யோசிக்கவில்லை.

அவர் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் விளையாடுகிறார் என்று நாசர் கூறியதை கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர்,நெருக்கடியான சூழ்நிலையில் கூட அவர் பெரிய சாட்டை ஆடி ரன் சேர்க்க வேண்டும் என யோசிக்கிறார். எனவே தன் மீது உள்ள நெருக்கடி குறித்தும் அவர் கவலையும் பயமும் இன்றி விளையாடுகிறார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதை எல்லாம் அவர் அமைதிப்படுத்தி விட்டார் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பதால் அவரால் விரைவாக 80 ரன்கள் அடிக்க முடியும் மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பால் எதிர்கொள்ளும் போது மட்டும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். எந்த சாட்டை தேர்வு செய்யப் போகிறோம் என்பது குறித்து அவர் முடிவு எடுக்க வேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங் விரைவில் இரண்டு மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டால் யாரேனும் ஒருவர் நடு வரிசையில் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் இதற்காகத்தான் ராகுலும் ஸ்ரேயாஸ் ஐயரும் நடுவரிசையில் இருக்கிறார்கள். இதில் ராகுல் தொடக்க வீரராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பதால் அவரால் விக்கெட்டுகள் விரைவில் இழந்தாலும் விளையாட முடியும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய நியூஸிலாந்து வீரர் சைமன் தூல், ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து இருக்கிறது. பேட்டிங் வரிசையில் சிக்கலான இடத்தில் அவர் களமிறங்குகிறார். அந்த இடத்தில் விளையாடும் போது சில நல்ல செயல்பாடும் வரும். சரியாக ரன்னும் அடிக்க முடியாது என்ற சூழலும் வரும். இதனால் ஸ்ரேயாஸ் ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். இதன் காரணமாகத்தான் அவருடைய ஸ்ட்ரைக் ரைட் அதிகமாக இருக்கிறது. இந்த பணியை அவர் சிறப்பாகவே செய்வதாக நான் நம்புகிறேன் என அவர் பாராட்டினார்.