லக்னோ : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இலங்கை அணி 210 ரன்கள் இலக்காக நிர்ணயிக்க அதனை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் 51 பந்துகளை எதிர் கொண்டு 52 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் மார்ஸ் பேசினார். அப்போது கவாஸ்கரும் அருகில் இருந்தார். மிச்சல் மாசின் தந்தையான ஜெஃப் மார்ஸ் கவாஸ்கர் உடன் விளையாடி இருக்கிறார்.

ஜெப் மார்ஸ் மெதுவாக விளையாடக்கூடிய வீரர். ஆனால் மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார். இதனை கிண்டல் செய்யும் விதமாக கவாஸ்கர் மிச்சல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று தடுப்பாட்டம் ஆடும் சைகையை கவாஸ்கர் செய்தார். தொடர்ந்து பேசிய கவாஸ்கர் ஏனென்றால் நீ தொடர்ந்து அதிரடியாக தான் விளையாடுகிறாய்.
அதனால் தான் நான் கேட்டேன் என்று கூறினார். கவாஸ்கர் இதை சிரிப்புக்காக தான் சொன்னார் என்றாலும் ஒரு வீரனிடம் தந்தை உனக்கு இதை சொல்லித் தரவில்லையா என்று கேட்பது தவறுதான் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கவாஸ்கரின் இந்த கேள்விக்கு மிச்சல் மார்ஸ்,அழகாக ஒரு பதிலை அளித்து அனைவரையும் சிரிப்படைய செய்தார்.
என்னுடைய தந்தை மெதுவாக விளையாடுவதால் அதற்கு ஈடு செய்யும் விதமாக நான் இவ்வாறு அதிரடியாக விளையாடுகிறேன் என பதில் அளித்தார். உடனே அங்கு இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். இதனை தொடர்ந்து பேசிய மார்ஸ், இந்த வெற்றி எங்களுக்கு இனி நேர்வழியை காட்டும் என நம்புகிறேன். எங்களுடைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடினார்கள்.
தென்ஆப்பிரிக்காவிடம் அடைந்த தோல்விக்கு பிறகு நாங்கள் நிச்சயம் மனதளவில் பாதிக்கப்பட்டோம். ஆனால் இந்த வெற்றி நல்ல நேரத்தில் கிடைத்தது. தற்போது வீரர்கள் நல்ல மனநிலையுடன் இருக்கிறார்கள். தொடரை நாங்கள் சிறப்பாக முடிப்போம் என நான் நம்புகிறேன் என்று மிச்சல் மார்ஸ் கூறினார்.