மும்பை : டி20 உலக கோப்பை ஐபிஎல் என இந்திய ரசிகர்கள் தற்போது திகட்ட திகட்ட 20 ஓவர் கிரிக்கெட்டுகளை பார்த்து விட்டனர். இந்த நிலையில் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்து காத்திருக்கிறது.
இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் இரண்டு டெஸ்ட், அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் , நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் என மொத்தம் இந்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இது இந்திய அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் இந்திய அணி 6, 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு மாற்றம் செய்தால் யாராலையும் இந்தியாவை அசைக்க முடியாது என கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இன்னும் டெஸ்ட் போட்டிகள் தொடங்க இரண்டு மாதங்கள் இருக்கிறது. இந்த இரண்டு மாதத்தில் ஹர்திக் பாண்டியாவை எப்படியாவது பேசி அவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க செய்து விட வேண்டும். ஹர்திக் பாண்டியா பேட்டிங் வரிசையில் ஆறு அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கி ரன்களை சேர்த்து குறைந்தபட்சம் ஒரு நாளில் பத்து ஓவராவது வீசினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து விடும்.
அதன் பிறகு எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி இந்தியாவை யாராலும் அசைக்க முடியாது என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. பாண்டியா ஒட்டுமொத்தமாகவே இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
எனினும் உடல் தகுதி பிரச்சனை காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பங்கேற்பதில்லை. இந்த சூழலில் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பதவியேற்று இருப்பதால் அவர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழைத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு 30 வயது தான் ஆகிறது என்பதால் அவரால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும்.