
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறைந்தபாடு இல்லை. உலகக்கோப்பை நடைபெறவிருக்கும் அக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸின் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்தப்படுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

SGM கூட்டம்
இதனை தீர்மானிக்க வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே மே 29ம் தேதி, SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை' பிசிசிஐ கூட்டம் நடத்தியது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது குறித்து முடிவெடுக்க ஐசிசி-இடம் கால அவகாசம் கோர முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் நடத்துவதே இன்னமும் முதல் தேர்வாக இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிகவும் கடினம்
இதனிடையே அது மிகவும் கடினம் என மைக் ஹசி கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. எனினும் கொரோனா தாக்கியது. டி20 உலகக்கோப்பையில் அதற்கும் அதிகப்படியான அணிகள் பங்கு பெறலாம். இதற்காக பல நகரங்களின் மைதானங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். வீரர்களை பல இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். அதில் தான் மிகப்பெரும் ஆபத்தே உள்ளது.என்னைப் பொறுத்தவரை டி20 உலகக்கோப்பையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வேறு ஏதேனும் ஒரு நாட்டை தேர்வு செய்வதே சிறந்தது. உலகின் பல நாடுகளும் இந்தியாவுக்கு சென்று விளையாட தயக்கம் காட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

கவாஸ்கர் பதிலடி
இந்நிலையில் கவாஸ்கர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர், இந்தியா, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக தான் இருந்தது. அதற்காக தொடரை நிறுத்தவில்லை. அந்நாட்டு வாரியத்திற்கு அப்போது பணம் தான் முக்கியமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆஸி, ஓபன் டென்னிஸ் போட்டியின் கொரோனாவுக்கு மத்தியில் நடைபெற்றது. இதனால் அதனை ஒரு காரணமாக கூற வேண்டாம்.

அவசரம் வேண்டாம்
யாரும் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கக்கூடாது என எண்ண வேண்டாம். ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் உள்ள நிலைமையை பார்ப்போம். அப்போதும் சரியாகவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொள்ளலாம். அதற்கு யாரும் தவறாக கணிக்க வேண்டாம். ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு இருந்தபோதும், அங்கு தொடர்களை அந்நாடு நடத்தியது. இந்நிலையில் அவர்கள் இந்தியாவை குறைகூறுவது ஆச்சரியமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











