ஹர்திக் பாண்டியா டிரேடிங் சர்ச்சை.. எவ்ளோ சம்பளம்னு வெளிப்படையா சொல்லுங்க.. கவாஸ்கர் கோரிக்கை
மும்பை: 2027 ஐபிஎல் ஏலத்திற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மற்ற அணிகள் டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐபிஎல் டிரேடிங் முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கும், தக்கவைத்துக் கொள்வதற்கும் பிசிசிஐ ஒரு குறிப்பிட்ட அதிகபட்ச தொகையை நிர்ணயிக்கிறது. இதுவே 'சம்பள வரம்பு' எனப்படுகிறது. அனைத்து அணிகளும் தங்களது அணியை உருவாக்க சமமான நிதி வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அதிக வசதி படைத்த அணிகள் மட்டுமே அனைத்து முன்னணி வீரர்களையும் எளிதில் வாங்கி விடுவது தடுக்கப்படுகிறது. ஆனால், ஐபிஎல் டிரேட் மூலம் வாங்கப்படும் வீரருக்கு அவருடைய சம்பளத்தை காட்டிலும் அதிக தொகை அளிக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது.

இது பற்றி கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், "ஐபிஎல் தொடரில் ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு வீரர்கள் கைமாறும்போது, அதற்கான தொகை எவ்வளவு என்பது சம்பந்தப்பட்ட இரண்டு அணிகள், குறிப்பிட்ட வீரர் மற்றும் பிசிசிஐ ஆகியோருக்கு மட்டுமே தெரிகிறது. இதனால் மற்ற அணிகளுக்கு ஒவ்வொரு அணியும் தங்களது சம்பள வரம்பை சரியாகப் பராமரிக்கின்றனவா அல்லது அதை மீறுகின்றனவா என்பது தெரிவதில்லை. எனவே, டிரேடிங் தொகையை பிசிசிஐ பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
2026 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பல அணிகள் அவரைத் தங்கள் அணிக்கு கொண்டு வர ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இதுபோன்ற டிரேடிங் முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் ஐபிஎல் தொடரின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்று கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
