பிசிசிஐ ப்ளான்
இந்தியாவின் இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் பிசிசிஐ கொண்டு வந்துள்ள புதிய நடைமுறை தான். அதாவது 50 ஓவர் உலகக்கோப்பைக்கான திட்டத்தில் 20 வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இதில் இருக்கும் சீனியர் வீரர்கள் யாருமே டி20 அணிகளில் சேர்க்கப்படுவதில்லை. ரோகித் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையில் வேறு ஒரு டி20 அணியும் தான் விளையாடி வருகின்றன.
கவாஸ்கர் குற்றச்சாட்டு
இந்நிலையில் அணி தேர்விலேயே குளறுபடி இருப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அயல்நாட்டு வர்ணனையாளர்கள் கூறும் கருத்துகளை இந்திய ஊடகங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தக்கூடாது என நினைக்கிறேன். என்னதான் சம்பளத்திற்காக இங்கு பணி செய்தாலும், அவர்களின் நாட்டை எப்படி வெற்றி பெற வைக்கலாம் என்று தான் நினைப்பார்கள். இதற்காக சம்பந்தமே இல்லாத வீரர்களை அணிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என கருத்துக்களை கூறிக்கொண்டே இருப்பார்கள்.
கவாஸ்கர் உதாரணம்
கடந்த உலகக்கோப்பையின் போதே இப்படி நடந்தது. ஐபிஎல் தொடரை வைத்து அவர்கள் கூறிய வீரரை பிசிசிஐ தேர்வு செய்தது. ஆனால் ஃபார்மை நிரூபித்த வீரர் கழட்டிவிடப்பட்டார். இதன் விளைவாக ப்ளேயிங் 11ல் பெரும் பின்னடைவு தான் இருந்தது. அவரை என்ன செய்வதென்று தெரியாமல் இந்திய அணி திணறியது. இதே நிலை மீண்டும் வரக்கூடாது என கவாஸ்கர் கூறியுள்ளார்.
யார் அவர்?
கவாஸ்கர் அந்த வீரரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் மறைமுகமாக விஜய் சங்கரை தான் கூறுகிறார். கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்காக இந்தியாவின் மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு நன்கு செட்டாகியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விஜய் சங்கர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார் என்றுக்கூறி வாய்ப்பு தரப்பட்டது. அது சொதப்பலாகவே சென்றது குறிப்பிடத்தக்கது.