கவாஸ்கர் விளாசல்
"பும்ரா, புவி இருவருக்குமே ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகள் தேர்வாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லையா? அவர்கள் இருவரும் உங்களிடம் ஓய்வு தேவை என கேட்டார்களா? அப்படி ஓய்வு கொடுக்க வேண்டும் என்றால் அதை குறைந்த ஓவர் போட்டிகளில் அளியுங்கள். அழிந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொடுக்காதீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலைமையில் அனைத்து சிறந்த வீரர்களும் களத்தில் ஆடுவதை உறுதி செய்ய வேண்டும்" என கூறி உள்ளார் கவாஸ்கர்.
அஞ்சு போட்டி ஆடிய புவனேஸ்வர்
புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளித்தது தான் கொஞ்சம் ஓவர். காரணம், புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பாதியிலேயே வெளியேறினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அப்போது ஒன்றரை மாதம் ஓய்வில் தான் இருந்தார் புவி. அடுத்து ஆசிய கோப்பையில் ஐந்து போட்டிகளில் ஆடியுள்ளார். வெறும் ஐந்து போட்டிகளில் ஆடிய வீரருக்கு ஓய்வளித்து இருப்பது தான் இங்கே கேள்விகளை எழுப்பி உள்ளது.
பும்ராவுக்கு மாற்றி மாற்றி ஓய்வு
அதே போல, பும்ரா காயம் காரணமாக ஒரு மாத ஓய்வில் இருந்து விட்டு, பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும், ஆசிய கோப்பையில் நான்கு போட்டிகளிலும் ஆடினார். ஆசிய கோப்பையிலேயே இரண்டு போட்டிகள் ஓய்வில் தான் இருந்தார் பும்ரா. இவருக்கு ஏன் இப்படி மாற்றி மாற்றி ஓய்வு அளித்து வருகிறார்கள் என்பதும் சந்தேகத்தை கிளப்புகிறது.
ஷமி, உமேஷ் கையில்
இவர்கள் இருவரும் தான் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள், இவர்கள் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் கையில் ஒப்படைத்துள்ளனர்.