பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அடுத்து வெற்றி விழா நடத்த திட்டமிட்டது. ஆனால் அது துயர சம்பவமாக மாறியது. அந்த வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடர் துவங்கிய சில ஆண்டுகளிலேயே கோப்பை வென்று இருந்தால், இது போன்ற ஒரு துயர சம்பவத்தை நாம் தவிர்த்திருக்கலாம் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இது பற்றி அவர் பேசியதாவது: "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் சில ஆண்டுகளிலேயே கோப்பை வென்று இருந்தால், இதுபோல அதிகப்படியான உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டு இருக்காது. இது 18 ஆண்டுகள் காத்திருந்ததால் ஏற்பட்டது. மற்ற அணிகள் கோப்பை வென்ற போது அதன் வெற்றி கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தது. ஏனெனில், அந்த ரசிகர்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

'ஈ சாலா கப் நம்தே' என்ற வாசகம் அந்த அணியின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருந்த ஒரு சாதனையாக இருந்தது. அதை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. இந்த ஆண்டு அந்த வாக்கியம் அதிகம் கேட்கப்படவில்லை. ஆனால் அந்த அணி அபாரமாக விளையாடியது. வெளி மைதானங்களில் விளையாடிய போட்டிகள் அனைத்தையும் வென்றது. அது ஐபிஎல் தொடரில் ஒரு புதிய சாதனை. அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என பெங்களூரில் இருந்த ரசிகர்கள் நினைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இந்த துயர சம்பவத்தில் தங்கள் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு எனது இதயம் கனிந்த இரங்கல்கள். ரசிகர்களின் வேண்டுதல்கள் மாற்றத்தை உண்டு செய்யும். இந்த ஆண்டு கோப்பையை அந்த அணி பெங்களூருக்கு எடுத்துச் சென்றதில் ரசிகர்களின் பங்கும் உள்ளது," என்று கூறியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.