“அவர் வந்தால் இந்தியாவுக்கு ஆபத்து” பும்ராவுக்கு மாற்று வீரர் யார்?.. கவாஸ்கர் கடும் எச்சரிக்கை!
மும்பை: ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து சுனில் கவாஸ்கர் முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன.
ஆனால் இந்திய அணியின் முதன்மை வீரரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து முடிவெடுக்கவில்லை.

பும்ராவின் மாற்று
மாற்று வீரருக்கான தேர்வில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் முகமது ஷமி கொரோனாவில் இருந்து மீண்டு வந்து, உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.

இரு வீரர்கள் போட்டி
ஆனால் இந்த ரேஸில் இருந்து தீபக் சஹார் மட்டும் தற்போது ஓரம்கட்டப்பட்டுள்ளார். முதுகுவலி காரணமாக பெங்களூரு தேசிய அகடாமியில் உள்ள தீபக் சஹாருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் தற்போது முகமது ஷமி அல்லது முகமது சிராஜ் இருவரில் யாரேனும் ஒருவரை தேர்வு செய்தே தீர வேண்டும்.

கவாஸ்கர் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரை முகமது சிராஜ் தான் சரியான தேர்வாக இருப்பார். தென்னாப்பிரிக்க தொடரில் மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்தார். ஆனால் முகமது ஷமி இந்தாண்டு ஒரு டி20 போட்டியில் கூட ஆடவில்லை. நேரடியாக அவரை எப்படி டி20 உலகக்கோப்பைக்கு கொண்டு வர முடியும். 2 பயிற்சி போட்டிகள் உள்ளது தான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருக்கிறார்.

முக்கிய குறை
ஷமியின் தரத்தை நான் குறைக்கூறவில்லை. நீண்ட நாட்களாக விளையாடாமல் உள்ள ஒரு வீரர் கொரோனாவுக்கு பின் உடனடியாக கம்பேக் கொடுப்பது கடினமான ஒன்று. அவரிடம் முன்பு இருந்ததை போன்ற வேகம் இருக்குமா? ஆனால் சிராஜ்-ன் சமீபத்திய செயல்பாடுகள் அட்டகாசமாக உள்ளன. எனவே சிராஜ் தான் நல்ல தேர்வு.


Click it and Unblock the Notifications