மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை யார் வெல்லப் போகிறார்கள் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்தியா வெல்லும் என ரசிகர்கள் இடையே நம்பிக்கை இருந்தாலும் பல அணிகளும் தற்போது அசுர பலத்துடன் இருப்பது இந்த தொடரை விறுவிறுப்பாக மாற்றி இருக்கிறது.

ஆசிய கண்டத்தில் நடைபெறுவதால் ஆசிய அணிகளுக்கு தான் முன்னுரிமை இருக்கும் என பலரும் கூறி வரும் நிலையில் கவாஸ்கர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இம்முறை உலக கோப்பையை மீண்டும் இங்கிலாந்து அணி தான் வெல்லும் என்று அவர் உறுதிப்பட கூடியிருக்கிறார். இங்கிலாந்து அணியில் இருக்கும் திறமையான வீரர்களை பாருங்கள். டாப் வரிசை,நடு வரிசை, கீழ் வரிசை என அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
மேலும் அவர்களுடைய ஆல் ரவுண்டர்களை பாருங்கள். அவர்கள் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்துமே ஆட்டத்தை தனி நபராக மாற்றக்கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். இதேபோன்று அவர்களிடையே நல்ல பந்துவீச்சு படையும் இருக்கிறது. மேலும் சுழற் பந்து வீச்சிலும் கைதேர்ந்த வீரர்களாக இருக்கிறார்கள். தற்சமயம் வரை இங்கிலாந்து அணிக்கு தான் உலக கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பு இருக்கிறது என கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதனிடையே இர்பான் பதான் இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என உறுதிப்பட கூடியிருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இந்திய அணி வீரர்கள் தற்போது நல்ல முறையில் செயல்படுவதால் நிச்சயம் நமக்கு தான் வாய்ப்பு என்றும் இர்பான் பதான் கூறி இருக்கிறார். ஆசிய கோப்பை ஆஸ்திரேலிய தொடர் என அடுத்தடுத்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய இர்பான் பதான், முகமது சமி போன்ற தலைசிறந்த வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றால் இந்திய அணியின் பலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.