போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தொடரில் இருந்து தேர்வு குழுவினர் கற்றுக் கொண்டது என்ன என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு இந்தத் தொடரில் பங்கேற்றது.

இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர் கலக்கினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் ரோகித் சர்மாவும் கோலியும் ரன் அடித்தார்கள். இதிலிருந்து தேர்வு குழுவினர் தங்களுக்குத் தெரியாத விஷயம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
இந்த தொடரில் சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். இல்லையென்றால் இளம் வீரர்களால் நட்சத்திர வீரர்களுக்கு எந்த நெருக்கடியும் வரக்கூடாது என்று தேர்வுக்குழுவினர் பார்த்துக் கொள்கிறார்களா என்றும் அவர் சாடியுள்ளார். மேலும் அஜித் அகார்கர் தற்போது தேர்வு குழு தலைவராக வந்திருக்கிறார். அவருடைய செயல்பாடு இனி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

எதிர்காலத்திற்கு தேவையான அணியை தேர்வு செய்வாரா? இல்லை பழைய கதையே தொடருமா என்று பார்க்க வேண்டும் இந்திய அணி மணப்பெண் தோழியாகவே இருக்கிறதே தவிர மணப்பெண்ணாக இன்னும் மாறவில்லை. கோலி முதல் டெஸ்டில் மிஸ் செய்த சதத்தை இரண்டாவது டெஸ்டில் பூர்த்தி செய்தார்.இது அவருடைய திறமையை மட்டும் காட்டவில்லை. எதிரணியின் பந்துவீச்சு, ஆடுகளம் எப்படி இருக்குது என்பதை எல்லாம் யோசித்து தான் கோலி செயல்படுகிறார்.
ஒவ்வொரு பேட்ஸ்மேனக்கும் நான்கு கண்டம் இருக்கும். ஒன்று தங்களது இன்னிங்ஸ் தொடங்கும் போது வரும். இரண்டாவது அரை சதம் அடித்த பிறகு வரும். ஏனென்றால் அவர்களுடைய கவனம் சிதைந்து இருக்கும் மூன்றாவது 90களில் இருக்கும் போது சதம் அடிக்க வேண்டும் என்று நெருக்கடி ஏற்படும். நான்காவது சதம் தான் அடித்து விட்டோமே இனி என்ன என்று யோசனை வரும் இது எல்லாம் தாண்டி விளையாடுவது தான் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.