
ஹர்திக்கின் கேப்டன்சி
இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வென்றுக்கொடுத்த ரோகித் சர்மா, முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முதல் போட்டியை ஹர்திக் பாண்ட்யா தலைமையேற்று வழிநடத்தவுள்ளார். அவரின் கேப்டன்சியில் டி20-ல் சாதித்து வரும் சூழலில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிற்குள் நுழைந்துள்ளார்.

கவாஸ்கர் கருத்து
இந்நிலையில் பாண்ட்யாவின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதில், ஹர்திக் பாண்ட்யா ஒரு வியப்பூட்ட வைக்கும் கேப்டன் ஆகும். டி20 கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் வழிநடத்திய விதம் மிக சிறப்பாக இருந்தது. டி20ல் சாதித்த அவர் மும்பையில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட வேண்டும். அதில் மட்டும் வெற்றியை கொடுத்துவிட்டால் 2023ம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்தவுடன் அவர் முழு நேர கேப்டனாக அறிவிக்கப்படலாம்.

அந்த ஒரு குணம்
ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படும் போட்டிகளிலெல்லாம் அணி வீரர்கள் எந்தவித அழுத்தமும் இன்றி செயல்படுவதை பார்க்கலாம். அந்த அளவிற்கு வீரர்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள விரும்புவார். ஒரு வீரர் எந்தவித அழுத்தமும் இன்றி விளையாடினால், அவரின் இயற்கையான ஆட்டம் வெளிவரும். அதற்காக ஹர்திக் பாண்ட்யா அனைத்து அழுத்தங்களையும் தன்மீது போட்டுக்கொள்கிறார் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அடுத்த தோனி
ஹர்திக் பாண்ட்யா முன்பை போல இல்லை என வல்லுநர்கள் பலரும் கூறுவது உண்டு. மிகவும் ஆக்ரோஷமான குணத்தை கொண்ட அவர் தற்போதெல்லாம் மிகவும் நிதானமாக செயல்படுகிறார். குறிப்பாக தோனியை போலவே சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாக விளையாடி, பின்னர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டுகிறார். எனவே அடுத்த தோனி இவர் தான் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











