பெயர் மாற்றம் பெற்ற மைதானம்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆடிய இரண்டாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்துக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று "பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் மைதானம்" என பெயர் மாற்றும் படலம், அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யாநாத் முன்னிலையில் நடைபெற்றது. சுமார் 24 வருடங்கள் கழித்து லக்னோவில் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து கிளப்பி வந்தது பிசிசிஐ.
கண்ணாடிக் கதவு உடைந்தது
இந்நிலையில், போட்டி துவங்கும் முன்பு வர்ணனை அறைக்குள் கவாஸ்கர் மற்றும் மஞ்ச்ரேகர் நுழைந்துள்ளனர். அப்போது அந்த அறையின் ஒரு கண்ணாடிக் கதவு உடைந்து நொறுங்கியுள்ளது. நல்ல வேளையாக ஒருவருக்கும் இந்த விபத்தில் காயங்கள் ஏற்படவில்லை. இந்த மைதானம் முழுவதுமே இந்த போட்டிக்காக புதிதாக சீரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களுக்கு இடையூறு
இது ஒரு பெரிய நிர்வாகக் குறைபாடு என்றால், மற்றொரு புறம் செய்தியாளர்கள் பகுதியில் சரியான இணைய தள வசதி கிடைக்காமல் செய்தியாளர்கள் அவதிப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் அவர்களின் வேலைக்கு இடையூறாக இருந்துள்ளது.
தனியார் மைதானம் என்பதால் குழப்பம்
இதை எல்லாம் சரி செய்ய வேண்டிய உத்தரபிரதேச கிரிக்கெட் அமைப்பும், பிசிசிஐ நிர்வாகிகளும், செய்வதறியாமல் நின்று கொண்டு இருந்தார்கள். இதற்கு என்ன காரணம் என பார்த்தால், இந்த மைதானம் தனியாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அதனால், முன்னேற்பாடுகள் அனைத்தும் அவர்களே செய்துள்ளார்கள். அதனால், எராளமான குறைகளோடு போட்டி நடந்து முடிந்தது.