டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் முறைகேடு விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் அல்லது அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல்.பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி முத்கல் கமிட்டியை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை மீதான விசாரணையின் போது, பிக்ஸிங் முறைகேடு குறித்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமெனில் தற்போதைய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இது குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த கிரிக்கெட் வாரியம், விசாரணை முடியும்வரை சீனிவாசன் "ஒதுங்கி" இருக்கலாம் என்று யோசனை தெரிவித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரிக்கெட்டின் எதிர்காலம் கருதி சில முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.
இதன் பின்னர் சீனிவாசன், தாம் விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து விலக ஒப்புதல் தெரிவித்தார். விசாரணையின் முடிவில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்கால தலைவராக மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் அல்லது அனுபவம் வாய்ந்த மற்றொரு வீரரை நியமிக்கலாம் என பரிந்துரைத்தது.
அதேபோல் நடப்பு ஐ.பி.எல் போட்டிகளில் பிக்ஸிங்க் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சஸ்பென்ட் செய்யவும் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகள் மீது கிரிக்கெட் வாரியம் நாளை பதில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது. அதன் பின்னர் பிக்ஸிங் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.