மும்பை: இந்திய கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டு முன்னாள் வீரர்களுக்கு கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அண்மையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு இருந்தார்கள்.
அது மட்டுமில்லாமல் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை யூடியூப் மூலம் தெரிவித்து வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்திய கிரிக்கெட் குறித்து கவலைப்பட வேண்டும் என்பது எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கின்றது.

உங்களுக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கு பெரிய அளவில் இந்திய கிரிக்கெட் குறித்து அறிவு கிடையாது. வேண்டுமென்றே விவாதத்தை ஏற்படுத்தி எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்திருக்கலாம்.
நீங்கள் பலமுறை இந்தியாவில் வந்து விளையாடி இருக்கலாம். ஆனால் இந்திய அணி தேர்வு செய்வது என்பது தேர்வு குழுவினரின் பணியே தவிர, உங்களுடைய பணி கிடையாது. முதலில் உங்களுடைய நாட்டில் நடக்கும் கிரிக்கெட் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இந்திய கிரிக்கெட் குறித்து இந்திய ரசிகர்களும் நாங்களும் கவலைப்பட்டுக் கொள்கின்றோம்.
உங்களுடைய நாட்டு அணிகள் தேர்வு செய்யப்படும்போது அதைப்பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை. ஏதோ உங்கள் நாட்டுத் தேர்வு குழுவினர் எல்லாம் சிறப்பாக செயல்படுவது போல் நீங்கள் எந்த விமர்சனமும் சொல்வது கிடையாது. ஆனால் எங்களுடைய விஷயத்தில் ஏன் உங்களுடைய மூக்கை நுழைக்கிறீர்கள். எங்கள் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யாராவது வெளிநாட்டில் நடைபெறும் தேர்வு குழு அல்லது அணி குறித்து ஏதேனும் விமர்சித்து இருக்கின்றோமா?
நாங்கள் எங்களுடைய வேலையை பார்க்கின்றோம். நீங்கள் யாரை தேர்வு செய்கிறீர்கள்? யாரை விட்டீர்கள் என்பது குறித்து எல்லாம் நாங்கள் கவலை பட்டதே கிடையாது. இதுக்கெல்லாம் காரணம் இந்திய ஊடகங்கள் தான். அவர்கள் தான் வெளிநாட்டு வீரர்களின் பேச்சை எடுத்து இங்கே பதிவிடுகிறீர்கள். இந்தியா வெளிநாட்டு தொடருக்கு விளையாட சென்றால், அங்குள்ள நாட்டைச் சேர்ந்த வீரர்களின் நேர்காணலை விரட்டி விரட்டி போடுகிறீர்கள். ஆனால் எங்களை யாரும் கேட்பதே கிடையாது என்று கவாஸ்கர் குறை கூறியுள்ளார்.