மாத்தறதுன்னா எல்லாத்தையும் மாத்த வேண்டியது தானே.. புரியாம பேசிகிட்டு.. சீறும் கவாஸ்கர்!
மும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், எம்சிசி (MCC) எனப்படும் மரில்போன் கிரிக்கெட் கிளப் டெஸ்ட் போட்டியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அளித்துள்ள பரிந்துரைகளை கடுமையாக சாடியுள்ளார்.
மரில்போன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் உலகின் பழமையான கிரிக்கெட் அமைப்பாகும். துவக்க காலங்களிலும், பல்வேறு கால கட்டங்களிலும் கிரிக்கெட்டின் பல விதிகள் குறித்து இந்த கிளப் கூறிய பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளது.

பரிந்துரை
இந்த நிலையில், சமீபத்தில் இந்த அமைப்பு டெஸ்ட் போட்டிகளில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்தது. அதில் குறிப்பாக அனைத்து நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரே பந்து தான் பயன்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்து இருந்தது.

மூன்று வகையான பந்துகள்
இதை தான் கவாஸ்கர் கடுமையாக எதிர்த்துள்ளார். தற்போது டெஸ்ட் போட்டிகளில், மூன்று வகையான பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் எஸ்ஜி பந்துகளும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குக்கபுர்ரா பந்துகளும், இங்கிலாந்து, வெ.இண்டீஸ் நாடுகளில் ட்யூக்ஸ் பந்துகளும் பயன்பாட்டில் உள்ளது.

சீறிய கவாஸ்கர்
டெஸ்ட் போட்டியில் ஒரே பந்து என்ற பரிந்துரை பற்றி பேசிய கவாஸ்கர், "நாம் இப்போது பந்துகளை வரைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுக்களை கேட்கிறோம். அப்படியே பிட்ச், பேட் என எல்லாவற்றையும் வரைமுறைப்படுத்தலாமே" என சீறினார்.

பல்வேறு சூழ்நிலை
மேலும், "கிரிக்கெட் எதற்காக ஆடுகிறோம்? வெளிநாடுகளுக்கு போய் வெற்றி பெற வேண்டும் என நினைப்பது ஏன்? ஏனெனில், நாம் பல்வேறு சூழ்நிலையில் ஆடுகிறோம் என்பதற்காகத் தான்" என்றார் கவாஸ்கர்.

ஏன் அவர்களுக்கு முக்கியத்துவம்?
"எம்சிசியின் உலக கமிட்டி என்பது, கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா, கொல்கத்தாவின் தேசிய கிரிக்கெட் கிளப் அல்லது மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் போன்றது தான். அவர்கள் கூறுவதை ஐசிசி முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்ளும் என அவர்கள் கூறுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நிறைய மக்கள் அவர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்" என்றார் கவாஸ்கர்.


Click it and Unblock the Notifications