மும்பை : இந்திய அணி வீரர்கள் குறித்து கருத்தும் அறிவும் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக பேசியிருக்கிறார்.
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணி குறித்து பல அறிவுரைகளை கூறி வருவார்கள்.

இது கவாஸ்கருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் இந்திய அணி குறித்து வெளியிலிருந்து தான் பல கருத்துக்கள் வருகிறது.இதற்கு நமது ஊடகங்களும் முக்கியத்துவம் தருவது வருத்தத்தை அளிக்கிறது. பாகிஸ்தான் வீரர்களும், ஆஸ்திரேலியா வீரர்களும் இந்திய அணியை தேர்வு செய்கிறார்கள். இந்திய அணி குறித்து அவர்களுக்கு ஏன் இந்த கவலை இந்திய வீரர்கள் யாரேனும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
இது உங்களுடைய வேலையே கிடையாது. ஆனால் நாம் ஏன் இதற்கு அனுமதி அளிக்கிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக பாகிஸ்தான் முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகிறது. அவர்களை பொறுத்தவரை விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர். பும்ராவை விட ஷாஹீன் ஆப்ரிடி சிறந்தவர். சச்சின் டெண்டுல்கரை விட இன்சாமம் தான் சிறந்தவர்கள். அனைத்துமே நம்மை விட பாகிஸ்தான் தான் சிறந்தது என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
இதையேதான் அவர்கள் உடைய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி வருகிறது. நமது ஊடகங்கள் அவங்களுக்கு ஏன் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா வீரர்கள் எல்லாம் இந்த வீரர் உங்களுடைய பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். உங்களுடைய பேட்டிங் வரிசையில் இந்த வீரர் தான் விளையாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். எங்களுக்கு உங்களுடைய அறிவுரை தேவையே கிடையாது. எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கவாஸ்கர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.