மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று கடைசியாக இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்தியா இந்த தொடரில் பல சாதனைகளை படைத்திருக்கிறது.
ஆனால் இந்தியாவின் வெற்றியை பாராட்டாமல் சிலர் ஏதோ இந்தியா ஏமாற்றி ஜெயித்து விட்டதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஆடுகளம் குறித்து குறை கூறி இந்தியா மீது உளவியல் தாக்குதலை சிலர் நடத்தினார்கள்.

இந்த நிலையில் இதற்கு சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இந்தியாவின் சாதனை பயணம் ஆடுகளம் புகாரால் மறைக்கப்பட முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், பிசிசிஐ ஆடுகளத்தை மாற்றியதாக எழுந்த புகார் முட்டாள்தனமானது. உலக கோப்பை போட்டிக்கு ஆடுகளத்தை பிசிசிஐயால் எப்படி தலையிட்டு மாற்ற முடியும்.
இந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமில்லாத ஒன்று. ஏனென்றால் ஐசிசி யின் ஆடுகள பராமரிப்பு ஆலோசகர் மைதானத்தில் தான் இருக்கிறார். இந்த ஆடுகளத்திற்கு ஐசிசி அனுமதி அளித்த பிறகுதான் போட்டியே நடத்தப்படுகிறது. இப்படி இருக்கும்போது எப்படி பிசிசிஐயால் ஆடுகளத்தை மாற்ற முடியும்.
நாக் அவுட் போட்டிகளுக்கு புதிய ஆடுகளத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்று எந்த ஒரு விதியும் இல்லாத போது எப்படி உங்களால் இந்த குற்றச்சாட்டை சொல்ல முடிகிறது.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் போட்டி நடத்தப்பட்டாலும், அதில் விசித்திரமாக எதுவும் நடைபெறவில்லை. அது அரை இறுதியில் உறுதியாகிவிட்டது. இந்தியா விளையாடிய அரையிறுதி ஆட்டத்தில் தான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை பிசிசிஐ ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த ஆடுகளத்தில் 725 ரன்கள் அடிக்கப்பட்டது.
அதில் இந்தியாவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அவரால் மட்டும் எப்படி அது முடிந்தது என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிலையில் இறுதி போட்டியில் தோய்வான ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதால் தான் இந்தியா தோற்று இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.