மும்பை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "தேர்வாளர்களின் முடிவை கேள்வி கேட்க முடியாது," என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில், ஓராண்டுக்கும் மேலாக டி20 போட்டிகளில் விளையாடாத சுப்மன் கில், நேரடியாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தையும், பலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரீகாந்த், முகமது கைஃப் போன்றோர் இந்தத் தேர்வை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

"தேர்வாளர்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரின் அனைத்துப் பரிமாணங்களையும் மிக உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். களத்தில் ஒரு வீரர் எப்படிச் செயல்படுகிறார், அணிக்கு வெளியே அவரது அணுகுமுறை எப்படி இருக்கிறது, அணியை வழிநடத்தும் திறன் அவரிடம் இருக்கிறதா என்பதை எல்லாம் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மிக நுணுக்கமாகக் கவனிப்பார்கள். எனவே, தேர்வாளர்கள் இந்த முடிவை எடுத்திருக்கும் பட்சத்தில், அதை நாம் கேள்வி கேட்க முடியாது," என்று கவாஸ்கர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கவாஸ்கர், "சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமிக்க தேர்வாளர்கள் ஏதோ ஒரு காரணத்தைக் கண்டறிந்திருப்பார்கள். அவர்கள் நிச்சயம் சரியான காரணங்களை யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். சுப்மன் கில் ஒரு சிறந்த வீரர், எதிர்காலத்தில் அணியை வழிநடத்தும் திறமையும் கொண்டவர். எனவே, இந்த முடிவை நாம் மதிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
ஒருபுறம் சுப்மன் கில்லின் துணை கேப்டன் தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபுறம் தேர்வுக்குழுவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
ரிசர்வ் வீரர்கள் - பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.