
இந்திய அணி தேவை
குறிப்பாக 2023ம் ஆண்டு திட்டமிடப்பட்டிருக்கும் 50 ஓவர்கள் உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. எனவே குறைந்தது அதனை வெல்வதற்காக இந்திய வீரர்களை கட்சிதமாக தேர்வு செய்ய வேண்டும். பேட்டிங்கில் பல தேர்வுகள் இருக்கும் நிலையில், பவுலிங்கில் பும்ரா, முகமது ஷமியுடன் ஒத்துழைப்பு கொடுக்கப்போகும் 3வது வேகப்பந்துவீச்சாளர் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முதன்மை தேர்வாக இருந்த புவனேஷ்வர் குமார் தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

சீனியர் பவுலரின் சொதப்பல்
கடந்த 2 வருடங்களாகவே புவனேஷ்வர் குமாரின் பவுலிங் மிக மோசமாக உள்ளது. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் கூட ரன்களை வாரி வழங்கி வருகிறார். இந்நிலையில் அவரின் எதிர்காலம் இல்லை என கவாஸ்கர் கூறியுள்ளார்.

கவாஸ்கரின் விளக்கம்
இதுகுறித்து பேசிய அவர், புவனேஷ்வர் குமார் தனது வேகத்தை இழந்துவிட்டார். துல்லியமாக பந்துவீசுவதையும் இழந்துவிட்டார். என்னைப் பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார் மீண்டும் தனது ஆரம்பக்கட்டத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கடும் முயற்சிகளுக்கு பின்னர்தான் உலகக்கோப்பைக்காக இந்திய அணிக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

மாற்று வீரர் யார்
இந்திய அணி தற்போது தீபக் சஹாரை பயன்படுத்தலாம். தீபக் சஹார் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்யக்கூடியவர். மேலும் பேட்டிங்கில் கடைசி வரிசையில் கூட உதவுவார். இதுவரை 2 அரைசதங்களை விளாசியுள்ளார். புவனேஷ்வர் குமார் கடந்த காலங்களில் இந்திய அணிக்கு சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஆனால் நேரங்கள் மாறுகின்றன. இது வேறு ஒருவரிடம் பணியை ஒப்படைக்க வேண்டிய நேரம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

புவனேஷ்வருக்கு மீண்டும் வாய்ப்பு
தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய புவனேஷ்வர் குமாருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் டி20 தொடரில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சீனியர் பவுலர்கள் அனைவரும் ஓய்வில் உள்ளதால் அவருக்கு கடைசி வாய்ப்பு தர இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications












