இந்திய அணியின் சொதப்பல்
இந்திய அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருந்து ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சஹால் போன்ற வீரர்கள் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளனர். ஆனால் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மட்டும் கூறிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.
ரசிகர்கள் ஏமாற்றம்
குறிப்பாக பேட்ஸ்மேன்களை திணறடிக்க கூட புவனேஷ்வர் குமாரால் முடியவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 64 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதே போல 2வது ஒருநாள் போட்டியில் வெறும் 8 ஓவர்களை வீசி 67 ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவர் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கவாஸ்கர் கருத்து
இந்நிலையில் புவனேஷ்வர் குமாரை அணியில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணிக்காக கடந்த நாட்களில் சிறப்பான பங்களித்தவர் புவனேஷ்வர் குமார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அவரின் ஆட்டம் அதிருப்தியளிக்கிறது. உள்நாட்டு டி20 தொடர்களில் கூட அவரால் சோபிக்க முடியவில்லை.
பாட்சா பலிக்கவில்லை
புவனேஷ்வர் குமார் ஸ்லோ பந்துகள், யார்க்கர்கள் என சிறப்பான பந்துகளையும் போடுகிறார். ஆனால் அது எதுவுமே எடுபடவில்லை. எதிரணி வீரர்கள் வெகு விரைவாகவே புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு திட்டத்தை அறிந்துவிடுகின்றனர். எனவே இனி அவரின் பாட்சா செல்லுபடியாகாது என கவாஸ்கர் கூறியுள்ளார்.
மாற்று வீரர் யார்
புவனேஷ்வர் குமாருக்கு மாற்று வீரராக தற்போது தீபக் சாஹர் சரியாக இருப்பார் என நினைக்கிறேன். அவரும் டெத் ஓவர்களில் மிகச்சிறப்பாக பந்துவீசக்கூடியவர். அவருக்கு இன்னும் வயது இருப்பதால் நிறைய வாய்ப்புகளை கொடுக்கலாம். மேலும் பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் உதவக்கூடுவார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.